வலைப்பதிவில் தேட..

Tuesday, September 25, 2007

தஜ்ஜால் யார்?

தயவு செய்து தஜ்ஜாலைப் பற்றி எனக்கு விளக்கவும்.

syedalikingatgmaildotcom

4 comments:

ஜி என் said...

பதில்களை யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே பதியுங்கள். பிற இணையங்களை பதில்களில் லிங்க் கொடுப்பதை தவிருங்கள். உங்கள் எழுத்தார்வம் வளர நீங்களாக டைப் செய்து பதிப்பதே சிறந்ததாகும்.

தஜ்ஜால் பற்றி கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் படிக்கும் நிலையில் இல்லை என்பதால் அதை நீக்கி விட்டு கேள்வியை புதிதாக பதித்துள்ளோம்.

முஸ்லிம் said...

தஜ்ஜால் என்பவன் மகா பொய்யன். இவன் உலக அழிவுக்குமுன் தோன்றுவான்.
இவனுக்கு மஸீஹுத் தஜ்ஜால் (Anti Christ) என்று மற்றொரு பெயரும் உண்டு.

கீழ்திசை நாடுகளில் ஒன்றிலிருந்து புறப்படுவான். வலக் கண்
குருடாயிருக்கும். இரு கண்களுக்கிடையே காஃபிர் - இறைமறுப்பாளன் என்று
எழுதப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் நல்லவனாக அறிமுகமாகும் தஜ்ஜால் காலப்போக்கில் தன்னை இறைவன்
என்று சொல்லிக்கொள்வான். அவன் செய்து காட்டும் அற்புதங்களைக் கண்டு
ஏமாந்து, மக்கள் பலர் அவன் வலையில் சிக்கிவிடுவார்கள். உலக நாடுகளையெல்லாம் சுற்றிவிட்டு, பைத்துல் முக்தஸை (ஜெருசலேம்) நோக்கி அவன் செல்லும்போது, இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து அவனைக் கொல்வார்கள்.

தஜ்ஜாலின் வருகையும், அவனது செயல்களும் ஈமானை இழக்கச் செய்யும் மிக ஆபத்தான விஷயம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

''ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை) நாள் வரும்
வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், ''அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். அறிந்து கொள்ளுங்கள்! மஸீஹுத் தஜ்ஜால் வலக் கண் குருடனாவான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும்'' என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

''எல்லா இறைத்தூதர்களும் தம் சமூகத்தினருக்கு ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்)பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை! அந்தப் பொய்யனுடைய இரு
கண்களுக்கிடையே காஃப் ஃப ரா (காஃபிர்) என்று எழுதப்பட்டிருக்கும்'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

தஜ்ஜால் - அவன் தன்னுடன் சொர்க்கம் மற்றும் நரகம் போன்றதைக் கொண்டு
வருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகிறானோ, அதுதான் (உண்மையில்)நரகமாக இருக்கும். (புகாரி, முஸ்லிம்)

தஜ்ஜால் (யுக முடிவு நாளுக்குமுன்) புறப்பட்டு வருவான். அவனுடன் நீரும்
நெருப்பும் இருக்கும், மக்களுக்கு நீராகக் காட்சி தருவது (உண்மையில்)
கரிக்கும் நெருப்பாகும். மக்களுக்கு நெருப்பாகக் காட்சி தருவது
(உண்மையில்) குளிரான சுவை நீராகும். உங்களில் யார் அந்த இடத்தை அடைகிறாரோ அவர் நெருப்பாகக' காட்சியளிப்பதில் விழட்டும்! ஏனெனில் அது
நல்ல சுவை நீராகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

''மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது.
அவற்றின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து அவனைத்
தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

தஜ்ஜால்:

அவன் குழந்தை இல்லாத மலடன்.

ஒரு கண் ஊனமுற்று மற்றொரு கண் நிலைகுத்திய நிலையில் பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன்.

குட்டையானவன், குண்டானவன்.

அதிக இடைவெளி உள்ள கால்களைக் கொண்டவன்.

மழை பொழிய வைப்பான், மலை போன்ற உணவுக்குவியல்களை வைத்திருப்பான்.

பிறவிக் குருடு மற்றும் வெண் குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துவான்.

ஒரு இறைநம்பிக்கையாளரைக் கொன்றுவிட்டு மீண்டும் அவரை உயிர்ப்பிப்பான்.உயிர்ப்பித்த அவரை மறுமுறையும் அவனால் கொல்ல இயலாது.

மேயச் செல்லும் கால்நடைகளை ஒரே பகலில் கொழுக்க வைப்பான். பூமியில் புதையல் உள்ள இடங்களை அறிந்திருப்பான்.

தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் - நம்பிக்கை கொள்ளச்செய்வான்.

பாலஸ்தீனத்திலுள்ள லுத்து எனும் நகரத்தின் தலைவாயிலருகே வைத்து நபி ஈஸா (அலை) அவர்கள் அவனைக் கொல்வார்கள்.

அவனிடமிருந்து பாதுகாப்புபெற...

''உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக அல்கஹ்ஃபு அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளயும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக்
கற்றுத்தந்திருக்கிறார்கள்...

''உங்களில் ஒருவர் தமது (தொழுகையில்) இரண்டாவது அமர்வை முடிக்கும்போது
நரகவேதனை, கப்ர் - மண்ணறை வேதனை. வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனை,மஸீஹுத் தஜ்ஜாலுடைய தீங்கு ஆகிய நான்கில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
(முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபில் கப்ரி, வ அவூதுபிக்க மின் ஃபித்னதில் மஸீஹுத் தஜ்ஜாலி, வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாதி, அல்லஹும்ம இன்னீ அவூதுபிக்க மினல் மஃஸமி வல் மஃஹ்ரமி'' என்ற துஆவை
நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஓதுபராக இருந்தார்கள். (புகாரி,முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவது, கடன் தொல்லை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இதே கருத்தில் இன்னொரு பிரார்த்தனை.

''அல்லாஹும்ம இன்னாவூதுபிக்க மின் அதாபி ஜஹன்னம், வ அவூதுபிக்க மின் அதாபிர் கப்ர், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹுத் தஜ்ஜாலி, வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்,'' என்ற துஆவாவை குர்ஆனில் உள்ள சூராவை கற்றுத் தருவது போன்று நபி (ஸல்) அவர்கள்
கற்றுத்தந்தார்கள். (முஸ்லிம்)

பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம். கப்ர் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

தஜ்ஜாலின் அனைத்துத் தீங்குகளிலிருந்தும், முஸ்லிம்களை இறைவன்
பாதுகாப்பானாக!

ஜி என் said...

சகோதரர் முஸ்லிம் அவர்களின் பதிலில்'ஆரம்பத்தில் நல்லவனாக அறிமுகமாகும் தஜ்ஜால்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரமும் மேலதிக விளக்கமும் வேண்டும்.

முஸ்லிம் said...

//சகோதரர் முஸ்லிம் அவர்களின் பதிலில்'ஆரம்பத்தில் நல்லவனாக அறிமுகமாகும் தஜ்ஜால்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரமும் மேலதிக விளக்கமும் வேண்டும்.//

தஜ்ஜால் ஆரம்பத்தில் நல்லவனாக அறிமுகமாகும் என்பது அவன் ஏற்கெனவே நல்லவனாக அறிமுகமாகியிருக்கிறான் என்ற கருத்தில் சொல்லப்பட்டது. இது தொடர்பாக நபித்தோழர் தமீமுத் தாரி (ரலி) அவர்கள் தஜ்ஜாலைப் பார்த்திருப்பதாக உள்ள செய்தி முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமீமுத் தாரி (ரலி) அவர்கள் கூறியது:

''நான் 'லக்ம்' 'ஜுதாம்' ஆகிய குலங்களைச்சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாத காலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது.
பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்கு) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்''

என்று அறிவித்து அந்தத்தீவில் ஒரு மண்டபத்திற்குள்ளே ஒரு மனிதரை சந்திக்கிறார்கள். அந்த மனிதனுக்கும் அவர்களுக்குமிடையே உரையாடல் தொடங்குகிறது. அவ்வுரையாடலின் ஒரு பகுதி:

''எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?'' என்று அம்மனிதன் கேட்டான்.

நாங்கள், ''அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்'' என்று பதிலளித்தோம்.

அவன், ''அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?'' என்று கேட்டான்.

நாங்கள், ''ஆம்'' என்றோம்.

அவன், ''அவர்களை அவர் என்ன செய்தார்?'' என்று கேட்டான்.

நாங்கள், ''அவர் தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டு விட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்'' என்று சொன்னோம்.

அதற்கு அவன், ''அப்படித்தான் நடந்ததா?'' என்று கேட்டான்.

நாங்கள் ''ஆம்'' என்றோம்.

அவன், ''அறிந்து கொள்ளுங்கள், அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன், நான்தான் மஸுஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது... என்று கூறினான்.

நீண்ட நபிமொழியின் சுருக்கம். இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் அவனை தஜ்ஜால் என்று உறுதிபடுத்தியிருக்கிறார்கள். இறைவன் தஜ்ஜாலை ஏற்கெனவே பிணைத்து வைத்திருக்கிறான். அவன் வெளியேறும் நாளை இறைவனே நன்கறிந்தவன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை தஜ்ஜால் உண்மைப் படுத்தியிருக்கிறான். அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே நல்லது என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறான். இதைவிட தஜ்ஜால் நல்லவன் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை என்று கருதுகிறேன். தமீமுத் தாரி (ரலி) அவர்களின் குழுவினரிடம் ஆரம்பத்தில் தஜ்ஜால் நல்லவனாகவே அறிமுகம் ஆகியிருக்கிறான். அவன் வெளியேற்றப்படும் நாளில் மக்களை வழிகெடுப்பான் என்பது மற்ற அறிவிப்புகளில் உள்ளது.