Sunday, April 26, 2009

கஸ்ருத் தொழுகை - தூரம், காலம்


அஸ்ஸலாமு அலைக்கும்

நான் குடும்பத்துடன் இப்போது (UNHCR இல் பதிந்து மூன்று மாதங்கள்) துர்கியில் நான்கு மாதங்கள் அகதியாக இங்கிலாந்து போவதற்காக வந்துள்ளேன் நான் இது வரையிலும் சுருக்கி தொழுது வருகிறேன் இங்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தான் அறிவான் எனது வினா எங்களுக்கு சுருக்கி தொழுவதற்குரிய கால எல்லை உண்டா? அல்லது தொடர்ந்தும் தொழலாமா( UK) போகும் வரை. குர்ஆன் ஹதீஸ் லிருந்து பதில் தரவும்.
 
Nasoordeen Seyed
.............................
 
ஜம்வு - கஸ்ர் விஷயத்தில் சற்று தடுமாற்றமான நிலையே நம் மக்களிடம் நீடிப்பதால் இது குறித்து கொஞ்சம் விரிவாகவே நாம் தெளிவுப் பெற வேண்டியுள்ளது.
 
முதலில் எவ்வளவு சென்றால் சுருக்கித் தொழலாம் என்பதை எடுத்துக் கொள்வோம்.
 
இதற்கு பரவலான மாறுபட்ட அபிப்ராயங்கள் நிலவுகின்றன. சிலர் 48 கி-மி, சிலர் 25 கி-மீ, வேறு சிலர் 8 கி-மீ என்று கருத்தை முன் வைக்கிறார்கள்.
 
அதிகப்படியான தொலைவை காரணமாக்கக் கூடியவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரம் என்ன?
 
இப்னு உமர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் நாற்பத்தெட்டு மைல் தொலைவிற்குப் பயணம் செய்யும்போது கஸ்ருச் செய்பவர்களாகவும் நோன்பை விடுபவர்களாகவும் இருந்தனர். (புகாரி)
 
இந்த செய்தி நபித்தோழர்களின் சொந்த முடிவாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர இதற்கு நபிவழியிலிருந்து எந்த ஆதாரத்தையும் எடுத்துக் காட்டவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
25 கிமீ - 8 கிமீ எது சரி?
 
இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் என்று முடிவு செய்பவர்களும் - எட்டு கிலோ மீட்டர் என்று முடிவு செய்பவர்களும் ஒரு ஹதீஸையே தங்களுக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
 
'நபி(ஸல்) பிரயாணத்தில் கஸ்ர் செய்து தொழுதார்கள்' என்ற ஒரு செய்தி முஸ்லிமில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை நபித்தோழரிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளர் நபி(ஸல்) மூன்று பர்ஸக்கில் கஸ்ர் செய்தார்களா.. ஒரு பர்ஸக்கில் கஸ்ர் செய்தார்களா.. என்பதை நான் மறந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
 
 إن رسول الله صلى الله عليه وسلم إذا خرج ثلاثة أميال أو ثلاثة فراسخ صلى ركعتين
 
எவ்வளவு தூரம் என்பதில் சந்தேகம் வந்து விட்டதால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாமல் போய் விட்டது. நவவி இமாம் போன்றவர்கள் பேணுதல் அடிப்படையில் அதிகப்படியான தூரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள். 1 பர்ஸக் என்பது சுமார் 8 கிலோமீட்டர் அளவைக் கொண்டதாகும். 3 பர்ஸக் 24 கிமீயை உள்ளடக்குவதால் அந்த அளவிற்கு பயணம் செல்பவர்கள் கஸ்ர் செய்யலாம் என்பது அவர்களின் அபிப்ராயம்.
 
அந்த செய்தியில் ஒரு பர்ஸக் என்ற தூர அளவும் முன் வைக்கப்பட்டுள்ளதால் இஸ்லாம் இலகுவானது என்ற அடிப்படையில் அதை எடுத்துக் கொள்ளலாம் என்பது சிலரது அபிப்ராயம்.
 
இதில் இரண்டாவது அபிப்ராயமே (அதாவது 1 பர்ஸகில் கஸ்ர் செய்யலாம் ) நமக்கு சரியாகத் தெரிகிறது. இதற்கு காரணம் உண்டு.
 
குறைவான தூர அளவை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு கிடைக்கக் கூடிய கூடுதல் ஆதாரங்கள்.
 
நாம் நபி(ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதோம். பின்னர் துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதோம். (அனஸ்(ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி).
 
மதீனா வழியாக மக்காவிற்கு உம்ரா - ஹஜ் செய்ய செல்பவர்களுக்கு உள்ள (மீக்காத்) இஹ்ராம் எல்லை துல்ஹூலைபாதான். இது மதீனாவிலிருந்து ஏறத்தாழ எட்டு கிமீ தூரத்தில் உள்ளது.
 
ஒரு பர்ஸகில் கஸ்ர் செய்யத் துவங்கலாம் என்பதற்கு இந்த செய்தி வலுவான ஆதாரமாக உள்ளது.
 
தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த) ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப் படுத்தப்பட்டது. (ஆய்ஷா (ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி)
 
உள்ளுரில் நான்கு ரக்அத் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் என்று தெளிவாக இந்த செய்தி அறிவிக்கின்றது. இதில் உள்ளுர் - பிரயாணம் என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளதால் பிரயாணம் கிளம்பி சொந்த ஊர் எல்லையை கடந்தவுடன் கஸ்ர் செய்யலாம் என்பதை சாதாரணமாக விளங்கலாம்.
இதற்கு கூடுதல் வலு சேர்ப்பதற்காக ' அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே நாடுகிறான்' என்ற குர்ஆன் வசனத்தையும் (2:183),
 
அலீ(ரலி) (வெளியூர்) புறப்பட்டுச் செல்லும்போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும் போதே கஸ்ருச் செய்தார்கள். திரும்பி வந்தபோது 'இதோ கூஃபா வந்துவிட்டது' என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (கஸ்ருச் செய்வோம்) என்று குறிப்பிட்டார்கள். (புகாரி) என்ற அலீ (ரலி) அவர்களின் செய்தியையும் யாராவது பொருத்திப் பார்த்தால் அவை இன்னும் கூடுதல் ஆதாரமாகும்.
 
3 பர்ஸக் கடந்த பிறகே நபி(ஸல்) கஸ்ர் செய்தார்கள் என்பதற்கு நாம் அறிந்த வரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நமது ஒரு பர்ஸக் என்ற அளவை இல்லாமலாக்கி விடாது. ஏனெனில் ஒரு பர்ஸக் என்பதற்குரிய ஆதாரங்களும் உள்ளன.
 
இனி கஸ்ர் தொழுகைக்கான கால அளவு என்ன என்பதைப் பார்ப்போம்.
 
இங்கும் பல கருத்தோட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
 
இப்னு அப்பாஸ், அலி போன்ற நபித்தோழர்கள் மாறுபட்ட கருத்தில் இருக்கிறார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) பத்தொன்பது நாட்கள் என்ற கருத்திலும், அலி(ரலி) பத்து நாட்கள் என்ற கருத்திலும், இப்னு உமர்(ரலி) பதினைந்து நாட்கள் என்ற கருத்திலும் உள்ளார்கள். திர்மிதியின் பயணத் தொழுகைப் பாடத்தில் இந்த விபரங்களைப் பார்க்கலாம்.
 
இதில் பத்தொன்பது நாட்கள் என்ற முடிவிலிருக்கும் இப்னு அப்பாஸ் அவர்கள் அந்த முடிவுக்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.
 
மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அப்போதெல்லாம் கஸ்ர் செய்தார்கள். (இதனால்) நாங்கள் பத்தொன்பது நாட்கள் கஸ்ர் செய்வோம் அதை விட அதிகமாக தங்கினால்  முழுமையாகத் தொழுவோம். (புகாரி - திர்மிதி - நஸயி).
 
ஆனாலும் இந்தச் செய்தியை வைத்து கஸ்ருக்குரிய நாட்கள் பத்தொன்பது தான் என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் நபி(ஸல்) மக்காவில் தங்கியது மொத்தம் பத்தொன்பது நாட்கள் தான். வெளியில் தங்கிய நாட்கள் முழுவதும் கஸ்ரு செய்துள்ளார்கள். இதிலிருந்து வெளியில் தங்கும் நாட்கள் (காலங்கள்) முழுதும் கஸ்ரு செய்யலாம் என்று தான் விளங்க முடியும்.
 
நபி(ஸல்) இருபது நாட்கள் தங்கி அதில் பத்தொன்பது நாட்கள் மட்டும் கஸ்ரு செய்திருந்தால் கஸ்ருக்குரிய கால அளவு பத்தொன்பது நாட்கள் தான் என்று முடிவு செய்வதில் மாற்று கருத்து எதுவுமிருக்காது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தங்கியதே மொத்தம் பத்தொன்பது நாட்கள் தான். தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்துள்ளார்கள்.
 
நபி(ஸல்) தபூக் போரின் போது அங்கு இருபது நாட்கள் தங்கினார்கள். தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்தார்கள் என்ற விபரம் 'நஸயி'ல் பதிவாகியுள்ளது.
 
பத்தொன்பது நாட்கள் என்ற முடிவை இந்த செய்தி மறுத்து விடுகிறது. இருபது நாட்கள் கஸ்ரு செய்த விபரம் கிடைத்தாலும் கஸ்ருக்குரிய காலம் இருபது நாட்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. இங்கும் தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்துள்ளதால் நாமும் அப்படித்தான் விளங்க வேண்டும்.
 
'அஜர்பைஜான்' என்ற சந்தைக் கூடும் பகுதிகளில் சில நபித்தோழர்கள் நான்கு மாதங்கள் கஸ்ரு செய்து தொழுதுள்ளார்கள் என்ற விபரம் 'பைஹகி' என்ற நூலில் கிடைக்கின்றது.  இது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது 'இத்துனை நாட்கள் தான் கஸ்ரு செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) வரையறுத்து சொல்லாததாலும் அவர்கள் வெளியில் தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்து தொழுதுள்ளதாலும், உள்ளுர் - பிரயாணம் என்று ஆய்ஷா(ரலி) அறிவிக்கும் செய்தி பிரித்துக் கூறுவதாலும் பிரயாணத்தில் ஒருவர் எவ்வளவு காலம் தங்கினாலும் (அவர் விரும்பினால்) கஸ்ரு செய்து தொழுதுக் கொள்ளலாம் என்ற முடிவே சரியாகத் தெரிகிறது.
 
இதற்கு மாற்றமாக நாட்களை தீர்மானித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்திலும் ஆதாரங்களுக்கு மாற்றமாக அனுமானங்களே மிகைத்து நிற்கின்றன என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
 
கேள்விக் கேட்ட சகோதரர் வெளிநாட்டில் இருப்பதாலும், அதிலும் நிலையில்லாத தொடர் பயணமாக அது இருப்பதாலும் அவர் காலம் முழுவதும் தொழுகையை சுருக்கி - கஸ்ரு செய்து தொழுதுக் கொள்ளலாம்.
 
சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்பவர் தினமும் பிரயாணி என்ற அந்தஸ்தில் இருப்பதால் அவர் (செங்கல்பட்டு சென்ற பிறகு அல்லது வழியில்) சுருக்கித் தொழுதுக் கொள்ளலாம். வெளிநாடுகளிலிருந்து  வருபவர்களுக்கும் இதுதான் பொருந்தும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்.)

.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

Sunday, April 19, 2009

நமக்குள் இஸ்லாம் மனிதன், ஜின், ஷைத்தான்


from: Abufawzeema Date: 2009/3/29
To: நமக்குள் இஸ்லாம் <fromgn@googlegroups.com>


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

முக்கியமான கேள்வி!

ஷைத்தான்கள் பற்றியது.

மனிதன், ஜின், ஷைத்தான் ஆகியவை மூன்று வேறுபட்ட படைப்பினங்களா?  ஷைத்தான் ஜின்னினத்திலும் மனித இனத்திலும் நின்றும் உள்ளவனா?  அல்லாஹ்வுக்கு மாறு செய்த "இபுலீஸ்" என்பவன் ஜின்னினத்தைச் சேர்ந்த்தவன். முன்றாவதொரு படைப்பாக ஷைத்தான்கள் படைக்கப்பட்டு இபுலீஸின் தலைமையில் அவர்கள் இயங்கச் செய்யப்படுகிறார்களா?

தெரிந்தவர்கள் குர்- ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்குங்கள். அல்லாஹ்
உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.

வஸ்ஸலாம்
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/4/9
To: fromgn@googlegroups.com


ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
 
ஷெய்த்தான் - இப்லீஸ் என்பது ஜின் இனத்தை மூலமாகக் கொண்டதாகும். ஜின் இனத்தை சார்ந்து தனது செயல்களின் காரணங்களால் ஷெய்த்தான் மற்றும் இப்லீஸ் உட்பட பல பெயர்களை பெற்றுக் கொண்டது. 
 
كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ
இப்லீஸ் ஜின் இனத்தை சார்ந்தவனாக இருந்தான். தனது ரப்புவின் கட்டளையை மீறி விட்டான். (அல்குர்ஆன் 18:50)
 
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும். அப்படிப் படைக்கப்பட்டதாலேயே ஷெய்த்தான் 'படைபால் உயர்ந்தவன்" என்று கர்வம் கொண்டான்.
 
قَالَ أَنَاْ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ
நான் அவரை (ஆதமை) விட சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்தாய். (அல் குர்ஆன் 7:12)
 
ஷெய்த்தான் என்பது ஷ(த்)தன என்ற மூல சொல்லில் இருந்து பிறந்ததாகும்.   இதற்கு "தொலைவில் உள்ளது" என்று பொருள்.  அவன் தனது மாறுபாட்டின் காரணத்தால் எல்லா நன்மைகளையும் விட்டு தூரமாகிப் போய்விட்டதால் அந்தப் பெயர் வந்தது என்ற கூற்று ஏற்புடையதாகும்.
 
திருக்குர்ஆனில் ஷெய்த்தான் பற்றி எச்சரிக்கப்பட்ட இடங்களை நாம் நோக்கும் போது "நன்மையைவிட்டு தூரமாக்கப்படும் செயல்களே சுட்டிக் காட்டப்பட்டு வந்துள்ளன" என்பதை கவனிக்கும் போது அந்தப் பெயருக்கான காரணத்தை நம்மால் விளங்க முடிகின்றது.
 
 إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لاَ تَرَوْنَهُمْ
 
(ஷெய்தானாகிய) அவனும் அவனது வம்சாவழிகளும், கூட்டத்தாரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு. (அல்குர்ஆன் 7:27)
 
எல்லாவித நன்மையை விட்டும் தூரமாகிப் போன ஷைத்தான்களின் தந்தையாகத்தான் இப்லீஸ் இருந்துள்ளான் என்பதை இன்னொரு வசனத்திலிருந்து விளங்கலாம்.
 
ஷைத்தான்களைப் பற்றி தொடர்ச்சியாக எச்சரிக்கும் ரப்புல் ஆலமீன்,  ஆதமுக்கு கட்டுப்பட்டு நடக்காததை பற்றிக் கேட்கும் போது "இப்லீஸ்" என்று அழைத்தே கேட்கிறான்.
 
قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلاَّ تَكُونَ مَعَ السَّاجِدِينَ
 
இப்லீஸே! ஸஜ்தா செய்தவர்களுடன் நீ இணையாமல் இருந்ததின் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான் (அல்குர்ஆன் 15:32)
 
இந்த இப்லீஸின் சேனைகளாக இயங்கும் ஷெய்த்தான்களே உலகில் பல பயங்கர விளைவுகளை - இறைநம்பிக்கையாளர்களுக்கு தொடர் தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  கடைசியில் அவர்கள் சேரும் இடம் நரகம்
 
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
 
இப்லீஸின் சேனைகள் நரகத்தில் தள்ளப்படும். (அல்குர்ஆன் 26:95)
 
மனித மனங்களில் குழப்பதை ஏற்படுத்துவதும், கணவன் மனைவிகளுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விளையாடுவதும்,  இணைவைப்பு என்ற பலதெய்வக் கொள்கையை, நம்பிக்கையை மனிதர்களிடம் ஆழமாக வேறூன்றச் செய்வதும் இப்லீஸ் மற்றும் அவனது படைபலமான ஷெய்த்தான்களின் பிரதான பணியாகும்.
 
தண்ணீரின் மீது இப்லீஸின் சிம்மாசனம் உள்ளது.  அவன் தினமும் பல திக்குகளிலும் தனது சேனையை அனுப்பி குழப்பம் விளைவிப்பான் அதில் அவனுக்கு மிக விருப்பமானது கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஊட்டுவதாகும் என்றெல்லாம் பல நபிமொழிகள் நமக்கு விளக்குகின்றன.
 
மனித மனங்களில் குழப்பங்களை விளைவிக்கும் அந்த பாரதூர செயலை செய்யக் கூடியவர்கள் மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் ஷெய்த்தானிய செயலை ஒத்திருப்பதால் அவர்களையும் ஷெய்த்தான் என்று குர்ஆன் அடையாளப்படுத்துகின்றது.
 
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
 
மனித மனங்களில் வீணான - வஸ்வஸான - எண்ணங்களை உருவாக்கும் ஷெய்த்தான்கள் ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 114:6)
 
ஹாருத் - மாருத் என்ற இரு மனித ஷெய்த்தான்கள் மக்களிடம் சூனியத்தை பரப்பி குழப்பம் விளைவித்ததையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளலாம்.  (அல்குர்ஆன் 2:102)
 
(இறைவன் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe

Tuesday, March 10, 2009

பரிசுபெற்றக்கட்டுரை. (குழுமத்திலிருந்து)


ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?
 
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

 

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

 

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

 

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.

இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.

***

கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்

ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. 

 
 
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான கட்டுரை.
 
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
 
 
 
அன்புடன்
ஹஸன் கமருதீன்.

Tuesday, March 3, 2009

ஜின்கள் பற்றிய கேள்வி


From: hussain_71 Date: 2009/3/1
To: நமக்குள் இஸ்லாம் <fromgn@googlegroups.com>


அஸ்ஸலாமு அலைக்கும்

ஜின்கள் பற்றி விளக்கவும்?

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/3/3
To: fromgn@googlegroups.com

ஜின்கள் பற்றி நாம் விரிவாக அறிந்துக் கொள்வோம்.

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களையும் - ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

இந்த இனம் மனிதர்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்ததா...என்றால் சிலர் அப்படிக் கூறினாலும் அதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.  ஆதம் (அலை) படைக்கப்பட்டு அவருக்கு ஸூஜூது செய்ய இறைவன் கட்டளையிட்டபோது ஷெய்த்தான் மறுத்து ஆணவம் கொண்டான் என்பதை நாம் அறிவோம். இப்லீஸ் - ஷெய்த்தான் போன்ற பெயர்களால் குறிப்படப்படும் அந்த மனிதமகா எதிரிகள் தனி படைப்பல்ல அவைகளும் ஜின் இனத்தை சார்ந்தவைகள்தான்.

(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)

ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதற்கு ஷெய்த்தான் எடுத்து வைத்த வாதம், தான் ஜின் இனத்தை சார்ந்தவன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)

நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.

இந்த ஜின் கூட்டம் முழுவதும் மலக்குகளுடன் இருந்துள்ளார்கள் என்ற விபரத்தை ஆதமுக்கு ஸூஜூது செய்யுங்கள் என்று கூறும் இறைவசனங்களிலிருந்து - சிந்திக்கும் போது - விளங்கலாம்.

மலக்குகளை நோக்கி நாம் சொன்னோம் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று. (அல் குர்ஆன் 2:34 இன்னும் பல இடங்களில் இந்த சம்பவம் இடம் பெறுகிறது)

நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்று நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 2:38)

'அனைவரும் இறங்கி விடுங்கள்' என்ற வார்த்தை மலக்குகளை விடுத்து மற்ற ஜின் இனத்திற்கும் ஆதம் - ஹவ்வா ஆகிய மனித இனத்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.

இதுவரை நாம் கண்ட விபரத்தின் சுருக்கும் என்னவென்றால்

மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது

அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.

ஷெய்த்தான் - இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.

ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.

ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.

இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.

அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்

(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே!  உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)

ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.

இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள் வந்தார்கள் என்பது முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு தான். முஹம்மத்(ஸல்) மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின் இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் மனித - ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும். 

இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் - வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் - பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் - ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்த சந்திப்பு.

(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் - நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30)

எங்களுடைய கூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரை ஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான். நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும் கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)

ஆனால் எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)

இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ - குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை 72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் - காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.

46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.

ஜின்களுக்கும் தூதுத்துவ செய்தியை எடுத்துக் கூறும் பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு ஜின்களின் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து - அழைத்து சென்ற விபரம் முஸ்லிம் - திர்மிதி - அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் - ஜின்களின் காலடி சுவடுகள் - அவர்கள் சமைத்த பாத்திரங்கள் - அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)

இந்த சந்திப்பிற்கு பிறகு தான் நபி(ஸல்) கீழ் கண்ட அறிவிப்பை செய்கிறார்கள்.

நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா - இப்னு உமர் - ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் - திர்மிதி - அபூதாவூத் - ஹாக்கிம்)

ஜின்களும் - சுலைமான் (அலை) அவர்களும்.

தாவூத்(அலை) அவர்களின் மகனான சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் வல்லமை மிக்க அரசாங்கத்தையும் - ஆற்றல் மிகுந்த வலிமையையும் - மெய் சிலிர்க்கக் கூடிய மொழியாற்றலையும் கொடுத்திருந்தான். இவற்றிர்க்குரிய ஆதாரங்களை முதலில் அறிவோம்.

சுலைமானுக்கு நாம் கடுமையாக வீசும் காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவரது ஏவலின் படி பாக்கியம் பொருந்திய பூமிகளுக்கு அவரை எடுத்துச் செல்லும். (அல் குர்ஆன் 21:81)

ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)

சுலைமானுக்கு ஜின்கள் - மனிதர்கள் - பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)

எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ஓ! எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாத விதத்தில் உங்களை நசுக்கி விடாதிருக்க... என்று கூறிற்று. இதைக் கேட்டு (சுலைமான்) அவர் புன்னகைத்தார் (அல் குர்ஆன் 27:18 - 19)

சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)

இந்த வசனங்கள் அனைத்தும் சுலைமான்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அருட்கொடையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு மட்டும் இப்படிப்பட்ட அருட்கொடை கிடைக்கக் காரணம் என்ன?

அவர்கள் இறைவனிடம் முறையிட்ட முறையீடுதான்!

எனக்கு பின்னர் எவருமே அடைய முடியாத ஒரு அரசாங்கத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய் என்று கூறினார் (அல் குர்ஆன் 38:35)

சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு பின் எவருமே அடைய முடியாத பெரும் அரசாங்கத்தை அவர்களுக்கு வழங்கினான். அதற்குரிய ஆதாரங்களைத் தான் மேலே கண்டோம். அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் ஜின்களும் அடங்கும். பலசாலியான ஜின்கள் - முத்துகுளிக்கும் ஷைய்த்தான்கள் எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்தன.

வீட்டிற்கு வரும் - ஜின்கள் - பாம்புகள்

ஜின் என்ற அரபு பதத்திற்கு - மறைவானது - என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிர்க்கு அந்தப் பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.

ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா (ரலி) ஹாக்கிம்)

பொதுவாக பாம்பினத்தை ஜின்கள் என்று குறிப்பிடலாம் இதற்கு குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது. (பார்க்க 27:10)

பாம்புகள் அனைத்தும் ஜின்கள் இல்லை ஆனால் ஜின்களில் சிலது பாம்புகளிலும் அடங்கும். இதை கருத்தில் கொண்டுதான் வீட்டில் உலவும் பாம்புகளை எடுத்தவுடன் அடித்து விட வேண்டாம் ஏனெனில் அவை ஜின்களாகக் கூட இருக்கலாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

ஜின்கள் கடும் விஷம் உள்ள பாம்புகளின் உருவில் இருக்காது என்பதால் கடும் விஷம் உள்ள பாம்புகளை எங்கு கண்டாலும் உடனே அடித்து விட வேண்டும்.

நபி(ஸல்) மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ''பாம்புகளைக் கொள்ளுங்கள் - முதுகில் வெள்ளைக் கோடுள்ள பாம்பையும் - குட்டையான சிதைந்த வாலுள்ள பாம்பையும் கொள்ளுங்கள் அவை இரண்டும் கண் பார்வையை அழித்து விடும்'' என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 3297)

விஷமுள்ள பாம்புகளை நபி(ஸல்) குறிப்பட்டுக் காட்டியதிலிருந்து அத்தகையப் பாம்புகளை காலம் கடத்தாமல் அடித்து விட வேண்டும். நல்லப் பாம்பை அடிக்காமல் விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் இந்த ஹதீஸ் கட்டுப்படுத்தாது. அவை கட்டாயம் அடிக்கப்பட வேண்டிய பாம்புகளாகும்.

வீட்டில் தென்படும் பாம்புகளில் ஜின்களும் அடங்கும் அதனால் அதை உடனே அடிக்காமல் போய்விடு என்று கூறுங்கள் மூன்றுமுறை கூறியும் போகாவிட்டால் அதை அடியுங்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூ லுபாபா(ரலி) புகாரி 3298 - முஸ்லிம்)

பாம்புக்கு காது கேட்குமா... தமிழ் அறியுமா... என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமல்லை. பாம்புக்கு செவி புலன் கிடையாது என்பது உண்மைதான். பாம்புக்கு தான் செவி புலன் கிடையாதே தவிர பாம்பு வடிவில் வரும் ஜின்னுக்கு செவிபுலன் உண்டு. ''போய்விடு'' என்ற அறிவிப்பு ஜின்னுக்குத் தானே தவிர பாம்புக்கு அல்ல. நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் பொய் இருக்காது என்பதால் எந்த மொழியில் சொன்னாலும் ஜின்களுக்கு விளங்கும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலைமானுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால் போய் விடு என்று ஹதீஸ் இருப்பதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அவ்வாறு நபி(ஸல்) சொல்லி இருக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளலாம்.

சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் கட்டுப்பட்டன என்பது உண்மை. இந்த கட்டுப்பாடு எதுவரை நீடித்தது? அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தான் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இதை நாமாக சொல்லவில்லை. குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே 'மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)

சுலைமான் (அலை) இறந்து அது ஜின்களுக்கு தெரிய வந்ததும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஜின்கள் விடுபட்டு விட்டன என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவித்து விடுகிறது. எனவே இன்றைக்கும் ஜின்கள் சுலைமானுக்கு (அலை) அவர்களுக்கு கட்டுப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். (ஜின்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அவற்றிர்க்கு கட்டளையிட சுலைமான் (அலை) உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையென்றால் ஜின்களுக்கு கட்டளையிடுவது யார்?)

ஒரு வேளை இன்றைக்கும் கட்டுப்படுவதாகவே வைத்துக் கொள்வோம் - ஒரு பேச்சுக்குதான் - வைத்துக் கொள்வோம்.

பிறரது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிர்க்கு நாம் எப்படி ஆர்டர் போட முடியும்.

ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியரைப் பார்த்து மாணவன் நீங்கள் தலைமையாசிரியருக்கு கட்டுப்பட்டவராக இருந்தால் எனக்கு அதிக மார்க் போடுங்கள் என்கிறான்.

முகலாய மன்னர்களுக்கு நீங்கள் கட்டுப்படுபவர்களாக இருந்தால் எங்களுக்கு வரி கொடுங்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.

இதுவெல்லம் அறிவுப்பூர்வமான வாதம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சுலைமான்(அலை) அவர்கள் பற்றிய நிலையும் அப்படித்தான். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் யாராவது இப்படி சொல்லி இருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கும். அவர்கள் மவுத்தாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி சொல்வது எந்த வகையிலும் பொருந்தவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் மட்டும் வசப்பட்டு இருக்கவில்லை. காற்றும் வசப்பட்டிருந்தது. இன்றைக்கு வேகமாக புயல் காற்று வீசும் போது ''நீ சுலைமானுக்கு கட்டுப்பட்டால் வீசாமல் நின்று விடு'' என்று யாராவது சொல்ல முடியுமா... ஜின்களுக்கு ஒரு நியாயம் காற்றுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியாது.ஏனெனில் இரண்டும் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டது தான். 

சுலைமானுக்கு கட்டுப்பட்டால் என்று ஹதீஸ் இருப்பதாக யாராவது கூறினால் ஹதீஸ் என்னையும் அது இடம் பெறும் நூலையும் கேளுங்கள் முடிந்தால் அந்த காப்பியை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஜின்கள் பற்றி ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளோம். ஜின்களை வசப்படுத்த முடியுமா... போன்ற மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்கள் எங்களுக்கு எழுதலாம். (இறைவன் மிக்க அறிந்தவனாக இருக்கிறான்)
 
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

Sunday, February 22, 2009

ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி


From: ZUBAIR AHAMED <zubai@yahoo.com>
Date: 2009/2/17
To: fromgn@googlegroups.com


எனது தம்பி முஸ்லிமானவர் முஸ்லிமான பெண்ணை மணமுடிதபின்னர் நான்கு வருடன்கல் வாழ்ந்து வெரொரு இந்து பெண்ணை கூட்டி கொண்டு ஒடிவிட்டார் வருடம் இரண்டு முடிந்து விட்டது ஒடிபொனவன் என்கெங்றும் தெரியவில்லை முதல் முச்லிம் மனைவிக்கு முடிவு என்ன
 
----------
From: Abufaisal <jmbaasha@>
Date: 2009/2/18
To: fromgn@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.... 

சகோதரர் ஜுபைர் அவர்களுக்கு 

இவ்வகையான வழக்கில் சட்டப்படி இந்தப்பெண் "காணாமல் போனவரின் மனைவி" என்று கருதப்படுகிறார், இதன்படி அப்பெண்ணின் கணவன் தொலைந்துவிட்டதாகவே கருதப்பட்டு அவனின் திரும்புதலுக்கான காத்திருப்பு காலமும் முடிந்துவிட்ட நிலையில் அவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான். 

இந்நிலையில் ஏற்கனவே இப்பெண்ணின் கணவன் ஓடிப்போய் இரண்டாண்டு காலம் முடிந்துவிட்டதாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை என்பதாலும் ஷரீயத் முறைப்படி நீதிபதியை (ஊர் ஜமாத்தை)அணுகி இத்திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பிறகு முறைப்படி (இறந்த கணவனுக்கு) இத்தா இருப்பதுபோல் இருந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளலாம். 

ஆதாரம்: ஷேய்க் பின் உத்தைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து. 

Book: Selected Fatawa for Women (page#40) by Muhammad bin Abul-Aziz Al-Musnad

அன்புடன்,

சகோ. அபூஃபைஸல்
----------
From: Mohamed Abbas <moham@>
Date: 2009/2/21
To: fromgn@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்.........


ஹசன் அல்பஸரி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்

ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்க பட்டவளாக ஆயி விடுவாள் என்று அறிஞர் கூறுவதுடன் அதனை ஹரமுடன் பித்தலாக் அல்லது ஹராமுன் பில்பராக் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.ஆனால் இது உணவைஒருவர் ஹராமாக்கி போன்ற தன்று.ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவைஒருவர் தமக்கு விளக்கி கொள்வதால் 'ஹரமான உணவு சொல்லப்பட்டது" மனவிலக்கு செய்யப்பட்ட பெண்ணை விலக்கப்பட்டவள் என்று சொல்வதுன்டு மூன்று கட்ட விசயத்தில் அல்லாஹ் கூறினான்; பின்னர் அவன் (மூன்றாவது தவனையில்) அவன் தலாக் சொல்லிவிட்டால்,பிறகு அவனில்லாத வேறொரு கணவனை மணக்கிறவரை அவள் மணக்கும் வரை அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவள். திருகுரான் (2:230) நூல் புகாரி 5263

இதிலிருந்து மூன்று தலாக் சொல்ல ப்பட்ட பின் தான் அவளுக்கு அடுத்த கணவரை மணக்க ஹலால் என்று அனுமதிக்கப்படும்.

மனிதன் தன் மனைவியை ஹராமாக்கி கொண்டால் அது ஒரு பொருட்டல்ல( அது தலாக் ஆக கருத  முடியாது) என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி உண்மையில் அல்லாவின் தூதரரிடத்தில் தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறினார்கள் புகாரி 5266

அதனால் அவர் அவளை ஹராமாக்கி சென்றாலும் (விட்டு தனித்து சென்றாலும்)அது தலாக் ஆக முடியாது. நிச்சயம் அவன் அவளுக்க்று மூன்று தலாக் கூறியே ஆக வேண்டும்.

எந்த பொருளுக்கு தான் உரிமையானில்லையோ, அந்த பொருளுக்கு நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு உரிமையில்லை, எந்த அடிமைக்கு அவன் உரிமையாளனில்லை அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமையில்லை.எந்த பெண்ணுக்கு(மணபந்ததின் வாயிலாக) உரிமையாளானாக இல்லை அவளை தலாக் செய்யவும் அவனுக்கு உரிமையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷீஐபு(ரலி) அவர்களின் பாட்டனர்  வாயிலாக அறிவிக்கிறார். நூல் திர்மதி, அபுதாவுது, திர்மதியில் ஸஹிஹ் வான தரத்தில் அமைந்துள்ளது. இப்னு கதிர் ஹதிஸ் கித்தாபு 1120

அதனால் யாருக்கும் அவளை தலாக் அல்லது விடுவிக்க அதிகாரமும் அல்லது தலாக் சொல்ல உரிமையில்லை... அது ஊர் தலைவராக இருந்தாலும் சரி, வேற யாராக இருந்தாலும் சரி..அவளுடைய கணவன் தவிர..

உண்மையில் கணவர் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன் இருந்தால் அல்லது அவனால் முறிந்தால் தான் முடியும் வேறு எவராலும் சாதரணமாக முறிக்க முடியாது. ஆனால் கணவன் மறைந்துவிட்டானோ? உயிருடன் இருக்கின்றானோ என்ற சந்தேகம் இருக்கும் போது வேறு யார்? இந்த பந்தத்தை முறிக்க முடியும்? முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்தபின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும்? அல்லாஹ் அவனுக்கும் மட்டும் அளித்த் உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார்?என்று கலிபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள்  கூறினார்கள். மேலும்  '' அல்லாஹ்வினாள் சோதிக்கப்பட்ட பெண்'' என்று  கூறினார்கள். நூல் தாரகுத்னி 3/313. இது ஸஹிவான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.


இருவரது திருமண உறவைப் பிரிக்க கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழித்த பின்னரே அவன் இறந்து விட்டதாக முடியு செய்யப்படும். அவனது மனைவி அது வரை அவனது மனைவி இத்தா இருப்பாள்
 நூல் கன்ஸீத்தகாயிக் பாகம் 1 பக்கம் 220
சில இமாம்கள் 120 ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சிலர் 70 ஆண்டுக்கு பிறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்

இதை அவர்கள் நபி(ஸல்) அவர்கள் எனது உம்மத்தின் வயது 60 முதல் 70 வரை இருக்கும் என்ற ஹதிஸிலிருந்து தொகுத்தார்கள்..

அவன் இறந்துவிட்டால் அல்லது மூன்று தலாக் சொல்லும் வரை அவர்களின் திருமண பந்தம் பிரியாது.. யாரலும் பிரிக்க இயாலது என்று மார்க்க அறிஞர்களான் நல் இமாம்கள் கூறியுள்ளார்கள்..

இதற்கு மாற்றமாக திருமண செய்து கொள்ளலாம் இருந்தால் நபி(ஸல்) அவர்கள் கூறி இருந்தால் தாரளாமாக எடுத்து கொள்ளங்கள். இதில் ஏதெனும் குறை இருந்தால் அல்லாவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்..

----------
From: நமக்குள் இஸ்லாம் <togee@>
Date: 2009/2/22
To: fromgn@googlegroups.com

ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி.
 
மனைவியை விட்டு ஓடி போய், தன்னைப் பற்றி எந்த தகவலையும் மனைவிக்கு தெரிவிக்காமல் ஒரு கணவன் இருக்கிறான் என்றால் அந்த மனைவியின் நிலை என்னவென்பது பற்றி அறிஞர்கள் மத்தியில் மாற்று கருத்து இருப்பதற்கு காரணம் இப்படி ஒரு சம்பவம் நபி(ஸல்) காலத்தில் நடக்கவில்லை என்பதேயாகும்.
 
இதற்கான நேரடியான ஆதாரங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சிந்தித்தால் இது குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
 
தலாக் (மணவிலக்கு) போன்ற சட்டவிதிகளை நாம் இங்கு பொருத்திப் பார்ப்பதற்கு முன் (அந்த விதிகள் இங்கு பொருத்தமற்றது என்பதை பின்னர் பார்ப்போம்) கணவன் - மனைவிக்கு மத்தியில் உள்ள உரிமைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
 هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ 
(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும் (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன்: 2:187)
 
கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்க வேண்டிய நெருக்கம், பாசம், புரிந்துணர்வு, அனுசரிப்பு, மகிழ்ச்சி போன்றவற்றை இதைவிட தெளிவாக விளக்கவே முடியாது என்று கூறும் அளவிற்கு இறைவன் அத்துனை அற்புதமான உதாரணத்துடன் விளக்கியுள்ளான்.  (ஓடிப் போன கணவன் இது எல்லாவற்றையும் உதாசீணப்படுத்தியவனாவான்)
 
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ
உங்கள் மனைவிகள் உங்களின் விளைநிலங்களாவார்கள். உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர்ஆன் :2:223)
 
மனைவியை விளைநிலம் என்ற உவமையோடு இறைவன் சுட்டியுள்ளதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். பல்வேறு பேருண்மைகளை இந்த உவமை உள்ளடக்கியுள்ளது.  அவற்றையெல்லாம் நாம் இங்கு விரிவாக விளக்கப் போவதில்லை.  விளைநிலத்தை வைத்திருப்பவர்கள் அதை பக்குவப்படுத்த - பாதுகாக்க கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த கடமையை நிறைவேற்றாதவர்கள் விளைநிலங்களில் சொந்தக்காரர்கள் என்ற அருகதையை இழந்துவிடுவார்கள்.  (ஓடிப் போகும் கணவன் தனது விளை நிலத்தைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விடுகிறான்).
 
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
(மனைவிகளாகிய) அவர்கள் மீது கணவர்களுக்கு இருக்கும் உரிமைப் போன்று மனைவிகளுக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (அல்குர்ஆன் 2:228)
 
மனைவி கணவனுக்கு அடிமையல்ல,  கணவனைக் கண்கண்ட தெய்வமாகவோ,  தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவனுக்கு தலையாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற உணர்வோ பெண்ணுக்கு இருக்கத் தேவையில்லை.  கணவன் மனைவி என்று கைகோர்த்துக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் ஒருவர்மீது இன்னொருவருக்கு உரிமையுண்டு என்பதின் அடிப்படையிலேயே என்பதை இந்த வசனம் தெளிவாக முன் வைக்கின்றது. ( மனைவியை விட்டு ஓடிப் போகும் கணவன் எந்த உரிமையில் அவ்வாறு செய்கிறான் என்பதை யார் விளக்க முடியும்)
 
இந்த வசனங்களை கருத்தில் கொள்பவர்கள் ஓடிப் போன கணவனுக்காக மனைவி காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும் என்ற வரட்டு சட்டத்தை - பெண்களை ஜடங்களாக ஆக்கி வைக்கும் சட்டத்தை முன் வைக்க மாட்டார்கள்.   அவளது மனநிலையையும், வாழ்வாதாரத்தையும், உடல் தேவைகளையும் புரிந்துக் கொண்டு ஒரு வழிகாணவே முயல்வார்கள்.  
 
மஸாயில் என்ற பெயரில் 99 வருடம், 120 வருடம் அந்தப் பெண் காத்திருக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.  இல்லறத் தேவைகளெல்லாம் முடிந்து, தள்ளாத வயதாகி இருக்கும் போது அந்த கணவன் வந்தால் என்ன? வரவில்லையென்றால் என்ன? அதனால் அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.    இந்த சட்டத்தை ஆதரி்பபவர்கள் தங்கள் குடும்ப பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் (அல்லாஹ் காப்பாற்றட்டும்) அந்த பெண்ணை இப்படி காக்க வைப்பார்களா... என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 
 
தலாக் சட்டம் பொறுந்துமா?
 
ஓடிப் போகும் கணவனிடம் தலாக் கொடுக்கும் சட்டம் இருப்பதால் அவனால் தான் அதை செய்ய முடியும் மற்றவர்கள் இதில் தலையிட முடியாது என்ற கருத்து முந்தைய பதிவில் வைக்கப்பட்டுள்ளது.  மனைவியை பிடிக்கவில்லை என்றால் அவளிடமிருந்து விடுதலைப் பெற சொல்லப்பட்ட சட்டம் தான் தலாக்.  மனைவியை தன் கட்டுப்பாட்டில் அடிமைப் போன்று வைத்துக் கொள்ள சொல்லப்பட்ட சட்டமல்ல.   கணவனைப் பிடிக்காத போது மனைவியும் அவனிடமிருந்து விகாரத்தை பெற்று்க் கொள்ளலாம் இதையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.   இந்த இரண்டு சட்டங்களும் ஒருவரையொருவருக்கு பிடிக்காமல் போகும் போது முன்னெடுக்க வேண்டிய சட்டங்களாகும்.   ஓடிப் போன கணவன் விஷயத்தில் இதை எப்படி பொருத்திப் பார்க்க முடியும். 
 
காத்திருக்க வேண்டிய காலம்
 
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலுள்ள குடும்ப உறவுக்கான விதிகளையும் - சட்டங்களையும் புறக்கணித்து விட்டு ஒருவன் ஓடுகிறான் என்றால் அவனுக்காக (அவன் எங்கிருக்கிறான் என்பதை அறியாத நிலையில்)  காலம் முழுதும் காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் பெண்ணுக்கு தேவையில்லை.   அவள் காத்திருக்க வேண்டிய காலம் பற்றி நேரடியாக ஆதாரங்கள் கூறாவிட்டாலும் பிற ஆதாரங்களிலிருந்து காத்திருக்க வேண்டிய காலத்தை நாம் தீர்மானிக்கலாம்.
 
 ஹதீஸ்.
 
 இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்" என்றார்கள்.
 
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது." என்று கூறினார்கள்.
 
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது" என்று கூறினார்கள்.
 
(ஸைத் இப்னு காலித்(ரலி) பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2429)
 
கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள மூன்று சூழ்நிலையில் ஒன்றை சார்ந்தவளாகவே இருப்பாள்.
 
கணவன் என்னவானான் என்று தெரியாத நிர்கதியாகிவிட்டவள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை - தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம். 
 
தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள்.  கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் "கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்" (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம்.
 
தகவல் புரட்சி விண்ணை முட்டும் காலத்தில் வாழ்கிறோம். ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்கு மூன்றாண்டுகாலம் என்பது இன்றைக்கு பெரிய பொழுதுதான் என்றாலும் ஹதீஸ்களில் அந்த கெடு வந்துள்ளதால் அதையே கடைபிடிக்கலாம்.  நம்மாலான அனைத்து வழியிலும்  கணவனை தேடி பார்க்க வேண்டும்.  மனைவி தேவை என்றால் இந்தக் காலகட்டங்களில் அவன் நிச்சயம் தொடர்புக் கொள்வான். அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டால் அவள் அதன் பிறகு காத்திருப்பது அவளது சொந்த விருப்பத்திற்குட்பட்டதாகிவிடும்.
 
இந்தக் காலகட்டத்திற்குள் கணவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவள் விஷயத்தில் கணவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான்  என்று முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிதான் வரும்.  பிரிந்த கணவனுக்கு மனைவி எத்தகைய நிலையை கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடித்து விட்டு அவள் வேறு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளலாம்.  அதன் பிறகு கணவன் உயிரோடு வந்தாலும் இவளைப் பொருத்தவரை அவனைக் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மீண்டும் அவனை இணைத்து வைக்க எத்தகைய முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்ற அச்சம் இருந்தால் அவன் நடவடிக்கையை பார்த்து சட்ட ரீதியாக அவனை தண்டனைக்குட்படுத்தலாம்.
 
(இறைவா நீ அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளன் என்பதை நாங்கள் நம்புகிறோம்)

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

Sunday, January 4, 2009

சஜ்தாவுடைய வசனம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
 
சஜ்தாவுடைய வசனத்தை ஓதினால் அல்லது கேட்டால் சஜ்தா செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
 
கேள்வி ======== 1. ஓதிய அல்லது கேட்ட உடனே சஜ்தா செய்ய வேண்டுமா ? 2. உடனே செய்யவேண்டுமெனில் எந்த இடமாக இருந்தாலும் செய்ய வேண்டுமா ? (உதாரணம் அலுவலகம், கடைதெரு -- வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அல்லது கடை தெருவில் நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது ஓதிக்கொண்டு சென்றால் அப்போது சஜ்தவுடைய வசனத்தை ஓதும்படி நேர்ந்தால்). 3. சஜ்தா செய்யும் பொது ஒளூ இருக்க வேண்டுமா? ஒளூ இருக்க வேண்டுமெனில், சஜ்தா செய்ய நேர்வதால் ஒளூ இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா அல்லது சாதாரணமாகவே குரான் ஓதும் போது ஒளு இருக்க வேண்டும் என கூறுகிறீர்களா? தயவுசெய்து விளக்கம் தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்
 
--
Best Regards,
Lukman.


வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபலகாத்தஹு
 
குர்ஆனில் ஸஜ்தா என்ற பதம் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று நாம் தொழுகையில் செய்யும் ஸஜ்தா முறையாகும். தொழுகையில் மட்டுமின்றி தொழுகைக்கு வெளியிலும் இந்த ஸஜ்தாவை செய்யும் சந்தர்பங்கள் உண்டு. அவைகளில் ஒன்று குர்ஆனின் சில வசனங்களை ஓதும் போது செய்ய வேண்டியதாகும்.

நாமாக ஓதும் போதும் சரி, பிறர் ஓதுவதை கேட்கும் சந்தர்பங்கள் அமைந்தாலும் சரி ஸஜ்தாவிற்குரிய வசனங்கள் வந்தால் அந்த சந்தர்பத்தில் ஸஜ்தா செய்ய ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ஆனாலும் முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் ஸஜ்தா வசனங்கள் எத்தனை... எவற்றிர்க்கெல்லாம் ஸஜ்தா செய்வது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

குறிப்பாக மத்ஹப்வாதிகளுக்கு மத்தியில் இதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை.

22:77 இது நம்பிக்கையாளர்களே ஸஜ்தா செய்யுங்கள் என்று சொல்லும் வசனம். ஆனால் ஹனபி மத்ஹப்வாதிகள் இந்த வசனத்திற்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று கூறுகிறார்கள். ஹனபி அறிஞர்கள் வெளியிட்ட (இந்திய அச்சு) குர்ஆனில் இதை காணலாம்.

38:24 வது வசனம் தாவூத் நபியவர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்தார் என்று சொல்லுகிறது. இந்த இடத்தில் ஸஜ்தா செய்ய தேவையில்லை என்று ஷாபி மத்ஹப்வாதிகள் கூறுகிறார்கள்.

இந்த கருத்து வேறுபாடு மட்டுமின்றி ஸஜ்தா செய்வது பற்றி சில பலவீனமான ஹதீஸ்களும் இருப்பதால் ஸஜ்தா வனங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள ஆசைப்படும் சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு குழப்பமான நிலை நிலவி வருகிறது. அந்த குழப்பங்களை நீக்கும் விதத்தில் இந்த கட்டுரையை அமைத்துள்ளோம்.

ஸஜ்தாவிற்குரிய வசனங்கள் 15 என்று பொதுவாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை தான் பிற்காலத்தில் குர்ஆனில் அச்சிட்டுக் கொண்டனர்.

நபி(ஸல்) 15 வசனங்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்று எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் இல்லை.

நபி(ஸல்) எனக்கு 15 ஸஜ்தா வசனங்களை ஓதிக் காட்டினார்கள் என்று இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். ஸஜ்தா வசனங்கள் 15 என்பவர்கள் இதைத்தான் ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த 15 வசனங்களில் ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நபி(ஸல்) ஓதிக் காட்டினார்களா... அல்லது குர்ஆனில் ஸஜ்தா வசனங்கள் நிறைய இருக்கின்றன என்பதை காட்டுவதற்காக ஓதிக்காட்டினார்களா... இவற்றிர்க்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நபி(ஸல்) ஓதிக்காட்டியதாக அந்த ஹதீஸில் எந்த விபரமும் இல்லை. இது முதலாவது காரணம்.

இப்னு மாஜா - தாரகுத்னி - அபூதாவூத் - ஹாக்கிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. இதில் இடம் பெறும் 'ஹாரிஸ் பின் ஸயீத்' என்பவர் யாரென்று அறியப்படாதவர். இவர் இந்த ஒரு செய்தியை மட்டும் தான் அறிவித்துள்ளார். எனவே இது பலவீனமான செய்தியாகும். இது இரண்டாவது காரணம். எனவே இந்த செய்தியை ஏற்க முடியாது.

15 வசனங்களுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்களில் நபி(ஸல்) சில வசனங்களுக்கு மட்டுமே ஸஜ்தா செய்துள்ளார்கள்.

அந்த 15 வசனங்கள், 7:206 - 13:15 - 16:49 - 17:107 - 19:58 - 22:18 - 22:77 - 25:60 - 27:25 - 32:15 - 38:24 - 41:38 - 53:62 - 84:21 - 96:19.

இவற்றில் நபி(ஸல்) ஸஜ்தா செய்த - செய்ய சொன்ன வசனங்கள் என்னவென்று பார்ப்போம்.

53:62 வது வசனத்தை நபி(ஸல்) ஓதி ஸஜ்தா செய்தார்கள் என்ற விபரம் புகாரி 1067 1070- முஸ்லிம் - திர்மிதியில் வருகிறது.

38:24 வது வசனத்தை ஓதி நபி(ஸல்) ஸஜ்தா செய்தார்கள் என்ற செய்தி புகாரி 1069 முஸ்லிம் - திர்மிதி 526ல் வருகிறது.


22:18,22:77 வசனங்களுக்கு நபி(ஸல்) ஸஜ்தா செய்ய சொன்ன விபரம் அஹ்மத் - திர்மதி 527 நஸயி ஆகிய நூட்களில் வருகிறது. திர்மிதியில் இடம் பெறும் ஹதீஸ் பலவீனமாகும். 'மிஸ்அர் பின் ஹாஆன் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர்.

84:21 - 96:19 ஆகிய வசனங்களை ஓதும் போது நபி(ஸல்) ஸஜ்தா செய்த விபரம் புகாரி 1074 - திர்மிதி 523 முஸ்லிம் - அஹ்மத் - அபூதாவூத் ஆகிய நூல்களில் வருகிறது.

இந்த ஆறு வசனங்களுக்கு நபி(ஸல்) ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைக்கின்றன. இது தவிர மற்ற வசனங்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு பலமான செய்திகள் ஒன்றும் இல்லை.

எனவே நாம் இரண்டு முடிவுக்கு வர வேண்டும்.

1) ஸஜ்தாவின் வசனங்கள் ஆறு என்று முடிவு செய்ய வேண்டும். அல்லது

2) ஸஜ்தா பற்றி கூறப்படும் அனைத்து வசனங்களுக்கும் ஸஜ்தா செய்ய முடிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது முடிவுக்கு நாம் வந்தால் ஸஜ்தா வசனங்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.

ஸஜ்தா பற்றி கூறப்படும் 15 வசனங்கள் மட்டுமில்லாமல் 3:113 - 7:120 - 15:98 -16:48 -20:70 - 25:60 - 26:46 -55:6 - 68:43 - 76:26 ஆகிய வசனங்களிலும் ஸஜ்தா பற்றி ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முடிவில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாமே தவிர இரண்டிற்கும் சம்பந்மதில்லாமல் 15 என்று வரையறுக்க எந்த முகாந்திரமும் இல்லை.

ஓதுபவர் மட்டுமின்றி ஓதுவதை கேட்பவரும் ஸஜ்தா செய்ய வேண்டும்.

நபி(ஸல்) நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தா செய்தார்கள். அப்போது அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தா செய்தார்கள் என்ற விபரம் புகாரி 1071 - ல் இடம் பெற்றுள்ளது.

ஓதுதை கேட்பவரும் ஸஜ்தா செய்துள்ளார்கள் - நபி(ஸல்) அதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதிலிருந்து ரேடியோ - தொலைக்காட்சி போன்றவற்றில் ஓதப்படும் வசனங்களுக்கும் (ஸஜ்தா வசனமாக இருந்தால்) ஸஜ்தா செய்யலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஒருவர் தெருவில் நடந்துக் கொண்டிருக்கிறார் அப்போது ஸஜ்தா வசனத்தை செவியுறுகிறார். அப்போது அவர் ஸஜ்தா செய்ய வேண்டுமா.... இது சிரமமாக இருக்காதா.. என்று சிலருக்கு தோன்றலாம். ஸஜ்தா வசனங்களுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டதல்ல என்பதை விளங்கிக் கொண்டால் ஐயம் விலகி விடும்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்னேன். அதற்கு அவர்கள் ஸஜ்தா செய்ய வில்லை என்று இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 1073 - திர்மிதி 525)

உமர்(ரலி) ஜூம்ஆவில் மேடையில் நின்று 16 வது அத்தியாயத்தின் ஸஜ்தா வசனத்தை ஓதி இறங்கி ஸஜ்தா செய்தார்கள். மக்களும் உடன் ஸஜ்தா செய்தனர். அடுத்த ஜூம்ஆவிலும் அதே வசனத்தை ஓதி 'மக்களே! ஸஜ்தா செய்ய நான் தூண்டவில்லை. ஆனாலும் யார் ஸஜ்தா செய்கிறாரோ அவருக்கு கூலியுண்டு. ஸஜ்தா செய்யதவர் மீது குற்றமில்லை என்றார்கள். (புகாரி 1077 திர்மிதி 525)

நாமாக ஓதும்போதாகட்டும், பிறர் ஓதுவதை - டிவி - ரேடியோவில் ஓதுவதை கேட்கும்போதாகட்டும் ஸஜ்தா செய்யக் கூடிய சூழ்நிலை இருந்தால் - விரும்பினால் - ஸஜ்தா செய்யலாம்.

ஸஜ்தா செய்யும் போது தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும் என்று ஒரு செய்தி அபூதாவூதில் வருகிறது. இதில் இப்னு உமர் என்று ஒருவர் வருகிறார் இவர் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தியை ஆதாரமாக எடுக்க முடியாது. எனவே தக்பீர் சொல்ல வேண்டும் என்பது சுன்னத்தல்ல.

ஒரு ஸஜ்தா செய்தால் போதும் - ஸஜ்தா செய்தார்கள் என்று தான் எல்லா அறிவிப்புகளிலும் வருகிறது. இதற்கு இரண்டு ஸஜ்தா செய்தார்கள் என்று பொருள் எடுக்க முடியாது.

ஸஜ்தா செய்து விட்டு எழுந்து ஸலாம் கொடுப்பதற்கும் எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஸஜ்தா செய்யும் போது ஒளுவுடன் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல. ஏனெனில் நபி(ஸல்) ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தபோது உடனிருந்த அனைவரும் ஒளுவுடன் தான் இருந்தார்கள் என்று கூற முடியாது. ஆனால் அனைவரும் ஸஜ்தா செய்துள்ளார்கள். ஒளு அவசியம் என்றால் இப்போது நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பார்கள். ஒளு அவசியம் என்று அவர்கள் கூறாததிலிருந்து ஒளு கடமையில்ல என்பதை விளங்கலாம்.

ஸஜ்தா வசனங்களில் ஓதும் துஆ.

ஸஜத வஜ்ஹிய லில்லதி க்கலகஹூ வஷக்க ஸம்அஹூ வபஸரஹூ பி ஹவ்லிஹி வகுவ்வதிஹி என்ற பிரார்த்தனையை நபி(ஸல்) செய்துள்ளாரகள். (ஆய்ஷா(ரலி) திர்மிதி 529)

(பொருள் : எனது முகத்தை படைத்து தனது வல்லமையாலும் ஆற்றலாலும் அதில் செவிப்புலனையும் - பார்வைப் புலனையும் ஏற்படுத்திய இறைவனுக்காக என்முகம் பணிகிறது)

ஸஜ்தா வசனங்கள் பற்றிய விபரங்கள் இதுதான்.

இதில் குறையையோ - மாற்று கருத்தையோ அறிஞர்கள் கண்டால் இறைவனுக்காக சுட்டிக்காட்டவும்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

Monday, December 22, 2008

"ஸல்" "அலைஹி" உங்களுக்கும் தான்.

ஸலாமுன் அலைக்கும்.
 
பொதுவாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்டுரைகள் எழுதும் போது இறைத்தூதர்களையோ முஸ்லிம் பெரியார்களையோ குறிப்பிடும் போது பெயருக்கு பக்கத்தில் சுருக்கமாக சில எழுத்துக்களை எழுதுவார்கள். பலருக்கு இது குறித்து சந்தேகம் மற்ற சிலர் விரும்பியவாரு விளக்கங்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே அது குறித்த விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கிறோம்.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்

எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

(ஸல்)

இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தப்புப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.

ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.
 

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்த விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)

நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)

என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.

எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.

நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(அலை)

இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.

நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا

(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)

நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.

ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.

இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.

ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(ரலி)

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் ரலியல்லாஹு அன்ஹு என்பதை நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் இறைவனின் இந்த வசனங்கள் தான்.
 

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (அல்குர்ஆன் 9:100) 

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)

முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)

இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.

சரி, நபித்தோழர்களல்லாத பிறருக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா.. அடுத்து வரும் வசனங்களைப் பார்ப்போம்.

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)
 

قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ

நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 3:15)
 

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)

மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ரஹ்மதுல்லாஹி அலைஹி

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்

மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுவோர் எழுதவும்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Sunday, December 14, 2008

ஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும் (10 நன்மைகள்)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (20 நன்மைகள்)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு (30 நன்மைகள்)
 
என்ற நிலையில் ''ஸலாம்" என்ற வார்த்தைக்கு மட்டும் எத்தனை நன்மைகள் என்று தெரிந்தால் மற்றவர்களும் அதை பயன்படுத்தலாமே. மேலும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? அல்லது அவர்கள் ஸலாம் கூறினால் பதிலாவது சொல்லலாமா?
 
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா
........................
 
பொதுவாக ஸலாமை பொருத்தவரை நாம்,
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
 
என்று மூன்று விதங்களில் சொல்லி பழகி விட்டதால் நாம் எழுதிய "ஸலாம்" என்ற ஒற்றைச் சொல் நெருடலாகவும், சிலருக்கு ஆச்சரியமாகவும் கூட இருக்கலாம்.
 
ஆனால் நாம் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை புரிய வைப்பது கடமை என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
 
முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த ஸலாமை சொல்வது போன்றே குர்ஆனில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ள ஸலாமையும் நாம் பயன்படுத்தலாம். அதுவும் ஸலாமை பரப்பியதாகவே அமையும்.
 
"அஸ்ஸலாமு அலைக்கும்" போன்று "ஸலாமுன் அலைக்கும்" என்றும் "ஸலாம்" என்றும் பயன்படுத்தலாம்.  இவை அனைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய ஸலாமின் உள்ளே அடங்கி விடும்.
 
ஸலாம்
 
َلَقَدْ جَاءتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُـشْرَى قَالُواْ سَلاَمًا قَالَ سَلاَمٌ فَمَا لَبِثَ أَن جَاء بِعِجْلٍ حَنِيذٍ
 
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து 'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்"  என்றார்  (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
 
இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்த வானவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.  பதிலுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையையே பதிலாக்கியுள்ளார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.  (இப்படி சொல்வது தவறென்று எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை)  எனவே குர்ஆனின் வழிகாட்டல் அடிப்படையில் "ஸலாம்" என்ற வார்த்தையை மட்டும் கூட பயன்படுத்தலாம் என்பதை விளங்கலாம்.
 
திருக்குர்ஆனில் ஸலாம் என்ற வார்த்தையே அதிகமான இடங்களில் (முகமனுக்காக) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு கூடுதலாக நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 
.........................
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
ஸலாம் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அது முழுமையான ஸலாம் சொன்ன பரக்கத் கிடைக்கும். மேலும், மாற்று மத சகோதரர்கள் ஸலாம் சொன்னால் நாம் பதில் சொல்வது கூடும். அதுபோல நாமும் அவர்களுக்கு ஸலாம் கூறலாம். அல்லாஹ் அஃலம்.
 
முஹம்மது இக்பால் - ஷார்ஜா,யு.ஏ.இ
.........................
ஸலாமுன் அலைக்கும்.
 
நாம் செய்யும் எல்லா அமல்களுக்கும் அதற்காக சொல்லப்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்தால் "இத்துனை நன்மை" "இவ்வளவு நன்மை"  என்று சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை நாம் செய்யாமல் இருந்து விட முடியுமா..?
 
நீங்கள் குறிப்பிட்டுள்ளப்படி ஸலாம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அந்த நன்மைகளோ அல்லது சற்று குறைவாகவோ "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையிலும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ள வார்த்தையாகும்.
 
குர்ஆனோடு ஒப்பிடும் போது ஹதீஸ்களில் சில விதிவிலக்கு, அல்லது மாற்று வியாக்யானங்கள் கொடுக்கலாமே தவிர ஹதீஸ்களோடு ஒப்பிட்டு குர்ஆன் வசனங்களுக்கு விதிவிலக்கோ - வியாக்யானங்களோ கொடுக்க முடியாது.
 
எனவே குர்ஆனில் ஒரு கட்டளை ஒரு தூண்டுதல் வந்துள்ள போது ஹதீ்ஸ்களை ஒப்பு நோக்கி குர்ஆன் வசனங்களை சற்று பின்னுக்கு தள்ளும் போக்கு கடுகளவும் நம்மிடம் வந்து விடக் கூடாது.
 
குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்.
 
10, 20, 30 நன்மைகள் என்று ஹதீஸ்களில் வழிகாட்டுதல் உள்ளதால் அவ்வாறும் கூறிக் கொள்ளலாம்.
 
மாற்றாருக்கு ஸலாம்.
 
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
 
மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை அனுமதித்தே வந்துள்ளது.
 
மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்
 
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
 
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
 
"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல.  எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
 
இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும் செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது.   (அல்லாஹ் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
......................
 
ஸலாத்தின் சிறப்பு குறித்து இன்னும் சில அறிவிப்புகள் உள்ளன அவற்றையும் அறிந்துக் கொள்வோம்.
 
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
 
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்.
 
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
 
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி,  திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம்.
 
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
 
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள். ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, இப்னுஹிப்பான், ஹாகிம்.
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Tuesday, December 2, 2008

'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!

ஊருக்கொரு அரஃபாதினமா..? ஆதாரங்கள் என்ன சொல்கின்றது?

ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.

அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.

இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.

இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.

இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.

திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் அரபுவாசகத்திற்கு கிளிக்

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்)  இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.

صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده


அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

அரஃபா இடமும் - தினமும்.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம் வந்தார்கள். 'நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

நபி(ஸல்) அரஃபாவில் தங்கினார்கள். இதுதான் அரஃபா, அரஃபா முழுவதும் தங்குவதற்கான இடமாகும் என்று குறிப்பிட்டார்கள்.

அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று தெளிவாக இறைத்தூதர் குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும்.

அந்த நாளில் அரஃபா பெருவெளியில் இருப்பவர்கள் நோன்பிருக்கக் கூடாது. நபி(ஸல்) அரஃபாவில் இருக்கும் போது நோன்பை விட்டு விட்டார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

என்றைக்கு அரஃபாவில் இருப்பவர்கள் நோன்பு நோற்கவில்லையோ அன்றைக்கு அரஃபாவிற்கு வெளியில் இருப்பவர்கள் நோன்பிருப்பது சுன்னத்தாகும். இது துல்ஹஜ் பிறை 9 அன்று நிகழ்வதாகும். இதையே நபி(ஸல்) துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்று அவர்களின் துணைவியர் அறிவிக்கிறார்கள். இதுவே முரண்பாடற்ற முடிவாகும்.

அரஃபா மைதானத்தில் மக்கள் கூடுவதையும், அவர்கள் நோன்பில்லாமல் இருப்பதையும் உலக மக்கள் அறியும் நிலையில் இன்றைக்கு எங்கள் பகுதிக்கு அரஃபா இல்லை என்று ஒரு சாரார் கூறுவதும், இன்றைக்கு நோன்பு வைப்பது சுன்னத்தல்ல என்று அறிவிப்பதும் பொருத்தமானதுதானா... என்பதை மக்கள் சிந்திக்கட்டும்.

அரஃபா மைதானத்திலிருந்து மக்களெல்லாம் புறப்பட்டு முஸ்தலிபா சென்றபிறகு இதுதான் அரஃபா நாள் (சில பகுதிகளில் இரண்டு நாட்கள் கழித்து இதுதான் அரஃபாநாள் என்று அறிவிப்பு) என்று சொல்லுவது எந்த அளவு நியாயமான வாதம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணமும், பிறையும்.

இஸ்லாத்தில் பல வணக்கங்களுக்கு பிறை முக்கிய அடையாளமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று ஹஜ்ஜாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பதில் முக்கிய முதலிடத்தில இருப்பது பிறையாகும்.

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அது மக்களுக்கு நாட்களையும், நேரத்தையும் காட்டி, ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று கூறும். (அல்குர்ஆன் 2:189)

பிறை பிறந்து ஹஜ்ஜு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பகுதிப் பிறையை ஒருவர் ஹஜ்ஜுப் பிறையாக கணக்கெடுத்தால் அவரால் ஹஜ் செய்ய முடியுமா...?

ஹஜ் என்பதே அரபா தான். யாரேனும் முஸ்தலிபாவில் தங்கும் (பத்தாம் - பெருநாள்) இரவின் பஜ்ருக்கு முன்பாக அரபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜைப் பெற்றுக் கொள்கிறார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உர்வாபின் முளர்ரிஸ் (ரலி) திர்மிதி அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா)

ஹஜ் என்பது முழுக்க முழுக்க அரபாவை (அரஃபா இடத்தை அடைவதை) சார்ந்தது என்று இந்த செய்தி மீண்டும் அறிவிக்கின்றது.

அந்தந்தப் பகுதி பிறை அடிப்படையில் அரஃபாவை தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்பவர்களில் ஒருவர் அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்கு சென்றால் ஹஜ் கூடிவிடும் என்ற அடிப்படையில் அவருடைய அரஃபா நாளில் அரஃபா செல்கிறார் (உதாரணமாக ஒருநாளோ, இரு நாளோ கழித்து பிறையைப் பார்த்து ஹஜ்ஜை தீர்மானிக்கும் ஒரு இந்தியர்) என்றால் அவரால் அரஃபாவை அடைய முடியுமா...? அவர் செல்லும் நாளில் அரஃபா வெறிச்சோடி கிடக்கும். அவரது ஹஜ் கனவும் வீணாகி போகும்.

மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் அரஃபா நாளில் அங்கு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளாத எவருக்கும் ஹஜ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தெளிவான நிலையில், ஹஜ் கிடைக்க வேண்டும் என்றால் தங்கள் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற முரணான போக்கை விட்டொழித்து குர்ஆனின் கட்டளைப்படி பிறை ஹஜ்ஜை அறிவித்து விட்டவுடன் அதைப் பின்பற்றியாக வேண்டும். பிறை பிறந்து ஹஜ்ஜை அறிவித்து அதே பிறை அரஃபாத்தையும் அறிவித்து அரஃபாவில் மக்கள் கூடி அவர்கள் நோன்பில்லாத நிலையில் அதே நாளில் பிறர் நோன்பு வைப்பதே அரஃபா நோன்பாகும். அதுவே சுன்னதாகும்.

அவர்கள் அரஃபாவை கடந்து, பெருநாள் தினத்தில் நுழைந்து பெரும் பகுதியினர் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இதுதான் எனக்கு அரஃபா தினம் என்று கூறுபவர்கள் அந்த முடிவை குர்ஆன் சுன்னாவிலிருந்து விளங்கி பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

மக்கள் அரஃபா தினத்தில் குழுமி இருக்கும் அதே நாளில் நோன்பிருப்போம். சுன்னாவை சுன்னாவாக பின்பற்றுவோம். இறைவன் அருள் புரியட்டும்
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Monday, December 1, 2008

கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும்.
கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்? மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும். --ஹஸன் கமருதீன்
 
வஅலைக்குமுஸ்ஸலாம்.
 
முஸ்லிம் உம்மத்தில் நடந்த வரலாற்று சோகங்களில் ஒன்று கர்பலா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நடந்த போர்.  இந்த போர் மற்றும் போரின் விளைவு குறித்து அன்றிலிருந்து இன்றுவரை உலகலாவிய முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் நடந்து வந்தாலும் "கர்பலா நிகழ்வை ஒரு அரசியல் நிகழ்வாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பது நமது நிலைப்பாடாகும். 
 
நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா (July 23, 645  - 683) என்பவரால் நடத்தப்படுகின்றது.   யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை.  அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார்.  அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.   (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)
 
ஒரு அரசியல் நிகழ்வாக நடந்து முடிந்த இந்த சம்பவத்திற்கு ஷியாக்கள் வேறு வடிவம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். இன்றுவரை அந்த அரசியல் நிகழ்வை இஸ்லாமிய நிகழ்வாகவே காட்டி வருகிறார்கள். 
 
இஸ்லாமிய வரலாற்றில் உலக முஸ்லிம்களின் இரண்டாம் தலைவராக ஆட்சிப்புரிந்து வந்த உமர்(ரலி) அவர்கள் ஒரு மடையனால் (அவன் முஸ்லிம் அல்ல)  கொலை செய்யப்பட்டபோது உமர்(ரலி) அவர்களின் இடத்தை நிரப்ப (அதாவது முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை பொறுப்பேற்க) அலி(ரலி) அவர்களே அன்றைய ஆலோசனைக் குழுவினரால் முன்மொழியப்பட்டார்கள்.  அலி (ரலி) அந்த பொறுப்பை ஏற்க மறுத்தவுடன் பொறுப்பு உஸ்மான்(ரலி) அவர்களிடம் செல்கின்றது.  (இந்த சம்பவம் புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது)  அந்த சம்பவத்தின் முக்கிய இடத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
 
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3699
 
அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்' என்று கூறினார்ள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலி அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். பிறகு தல்ஹா(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்' என்று கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்முhன் - ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)' என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்' என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்' என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
முதலில் ஆட்சிப் பொறுப்பு அலி (ரலி) அவர்களிடமே கோரப்படுகின்றது.  பிறகே உஸ்மான் (ரலி) அவர்களிடம் செல்கின்றது.  ஆட்சிப் பொறுப்பை முன் மொழிந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களையடுத்து தனது முதல் ஒப்புதலை( இன்றைய ஓட்டெடுப்பு முறை) ஜனநாயக முறையில் அலி (ரலி) அவர்களே செலுத்துகிறார்கள்.  ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்கெடுப்பிலும் கருத்து வேறுபாடின்றி உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி அமைகின்றது.   உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான கருத்தோட்டங்கள் துவங்கி வலுபெற்று கடைசியில் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையில் அது முடிகின்றது.  அவர்களின் இடத்தை அலி(ரலி) நிரப்புகிறார்கள்.  
 
ஒரு ஜனாதிபதியின் கொலை, அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியின் பதவிஏற்பு என்று சூழ்நிலையின் கடினம் மக்களை பலவிதமாக சிந்திக்க வைத்து அவை முஸ்லிம் உம்மத்தின் பிரிவினையாக உருவெடுக்க வைத்து விட்டது.  அதன் தொடர்ச்சியாக நடந்ததே கர்பலாவாகும்.   வரலாற்று சம்பவங்களை ஊன்றி படிப்பவர்களுக்கு, அந்த வரலாறு குறித்து சிந்திப்பவர்களுக்கு "கர்பலா என்பது ஒரு அரசியல் நிகழ்வு" என்பது தெளிவாக விளங்கும்.
 
அதை ஒரு அரசியல் நிகழ்வாகவே சில முக்கிய நபித்தோழர்களும் பார்த்தார்கள். அதனால் தான் யஸீத் பின் முஆவியாவின் ஆளுமைக்கு எதிரான கிளர்ச்சி துவங்குவதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆட்சியாளராக இருந்த யஜீதையே அவர்கள் ஆதரித்தார்கள்.  இதற்கான சான்றை பார்த்து விட்டு தொடர்வோம்.
 
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7111 

 நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, 'மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார்கள்.
 
யஜீதின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் அவரது ஆட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நடக்கத் துவங்கிய போது மிக சிறந்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள் என்பதும், யஸீதின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வது நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறி அதற்கு சான்றாக நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை சமர்பித்ததுத் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கதாகும்.    
 
ஒரு ஆட்சியாளரின் ஆட்சிக்கு கீழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கும் போது அங்கு வேறு ஆட்சியாளரை கொண்டு வர முயற்சிப்பது, உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்றவை இறையாண்மைக்கு எதிரானது என்று இஸ்லாம் சொல்கின்றது.
 
سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
 
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
 
இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குழப்பம் விளைவிப்பவர்கள் முஸ்லிமா அல்லது பிறரா என்று பார்க்கப்படமாட்டார்கள். ஆட்சியாளர்கள் அவர்களை குழப்பக்காரர்களாகவே பார்ப்பார்கள்.   அத்தகைய குழப்பம் விளைவதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.  இப்னு உமர் (ரலி) அவர்கள் யஜீத் பின் முஆவியாவை யஜீத் என்ற தனிமனிதனாகப் பார்க்கவில்லை. அவர் ஒரு ஆட்சித்தலைவர் என்றே பார்க்கிறார்கள்.  நமது நிலைப்பாடும் அதுதான்.
 
ஷியாக்களால் வன்மையாக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பக்கங்களை கருத்தில் கொள்பவர்கள்தான் கர்பலாவை உலகலாவிய துக்க இடமாகவும், துக்க தினமாகவும் பார்ப்பார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
-
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Sunday, November 23, 2008

அரபுமொழி பற்று ஏன்?

கேள்வி - அல்லாஹ் குர்ஆனில் சிந்தித்து உணரும்படி வலியுறுத்துகிறான். அவ்வகையில், குர்ஆன் அருளப்பட்டது அரபி மொழியில், அதன் வசனங்களை நமது ஐவேளை தொழுகைகளில் அன்றாடம் அதே அரபி மொழியில்தான் ஓதி வருகிறோம். ஆனால் உலகில் உள்ள முஸ்லிம்களில் 70 சதவிகிதம் பேர் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. இவர்கள் குர்ஆனுடைய விளக்கங்களை தங்களது மொழிபெயர்ப்புகளிலிருந்துதான் விளங்கிக் கொள்கின்றனர். அப்படி இருக்க பொருள் உணர்ந்து அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டிய தருணமான தொழுகையில் அரபியில்தான் ஓத வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது ஏதோ அரபு மொழிப்பற்றை வளர்ப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியமாகவே தெரிகிறது. இந்த விஷயத்தை விளக்கவும்.
 
உங்களைப் போன்றே பலரும் சிந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதில் சில முக்கியமான விஷயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் அரபியில் ஓதுவதற்கான காரணங்கள்.

1 - எது இறை வணக்கம் என்று இறைத்தூதரால் காட்டிக் கொடுக்கப்பட்டதோ அதை மொழிமாற்றம் செய்யவோ அல்லது அதே மொழியில் வேறு சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளவோ இறைத்தூதர் அனுமதிக்கவில்லை என்பது முதலாவது காரணம்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு தோழருக்கு இரவில் பிரார்த்திப்பதற்காக ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் 'வநபிய்யிக அல்லதி அர்ஸல்த' (உன்னால் அனுப்பப்பட்ட நபியையும் (நம்புகிறேன்) என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த நபித்தோழர் அந்தப் பிரார்த்தனையை மனனம் செய்துக் கொண்டு வந்து இறைத் தூதரிடம் ஒப்புவித்து சரிபார்க்கிறார். அப்போது 'வநபிய்யிக அல்லதி அர்ஸல்த' என்று இறைத்தூதர் கற்றுக் கொடுத்த அந்த வார்த்தையை மாற்றி 'வரஸூலிக அல்லதி அர்ஸல்த' என்று மனனம் செய்து வந்தார்.

'நபிய்யிக' 'ரஸூலிக்க' ஒரேயொரு பதம் மாறுகிறது. ஆனால் இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான். 'நபிய்யிக' 'உனது நபியை' - 'ரஸூலிக்க' 'உனது தூதரை'. நபியாகவும் - ரஸூலாகவும் முஹம்மத்(ஸல்) இருக்கும் போதும் 'நபிய்யிக' என்றுக் கற்றுக் கொடுத்ததை 'ரஸூலிக்க' என்று மாற்றிக் கொண்டு வந்ததை முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. 'நான் கற்றுக் கொடுத்தது போன்று 'நபிய்யிக' என்றே சொல்' என்று திருத்தம் செய்கிறார்கள். (இந்த சம்பவம் புகாரியின் ஆரம்பத்திலேயே இடம் பெறுகிறது)

நபி - ரஸூல் இரண்டும் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும், ஒரே மொழியில் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும் கூட முஹம்மத் (ஸல்) அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது என்று அவர்கள் விளக்கியுள்ளதால் 'அவர்கள் எதையெல்லாம் வணக்கமாக - பிரார்த்தனைகளாக சொல்லிக் கொடுத்தார்களோ அவற்றில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது.

தொழுகை என்பது இறை வணக்கமாகும். அதில் இறைத்தூதர் அரபியில் தான் ஓதியுள்ளார்கள். அரபியில் தான் ஓத வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள் என்பதால் அரபியில் ஓதுவது தான் சரியாகும். இதை அரபி மொழிப் பற்று என்பதை விட இறைத்தூதர் மீதான விசுவாசமும் அவர்களை முழுவதுமாகப் பின்பற்றுவதற்கான அடையாளமுமாகும் என்பதே சரியாகும். ஒருவேளை முஹம்மத் (ஸல்) அவர்கள் அரபியல்லாத வேற்று மொழியில் வந்திருந்தால் அப்போது யாரும் அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அவர்கள் எந்த மொழியில் வந்தார்களோ அந்த மொழியில் தான் வணக்கங்கள் நடக்கும். இதிலிருந்து மொழியை விட இறைத்தூதருக்கு தான் முக்கியத்துவம் என்பதை விளங்குவீர்கள்.

அரபி மொழிப் பற்று தவறா..

அரபு மொழியின் மீதான விசுவாசமே அவ்வாறு செய்ய சொல்கிறது அல்லது செய்யும் படி தூண்டப்படுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் அதுவும் அவசியம் தான் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மொழி எந்த அளவிற்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நீண்ட ஆயுளைப் பெறும். தமிழ் என்ற மொழி பேச்சு வழக்கிலாவது இருப்பதால் தான் அதனால் இரண்டாயிரம் வருடங்களாக தாக்குபிடிக்க முடிகிறது. ஆனால் சமஸ்கிரத மொழியின் நிலை என்ன? வேதங்கள் அந்த மொழியில் இருந்தும் அது நடைமுறைப் படுத்தப்படாமலாகி விட்டதால் மக்களிடமிருந்து அந்த மொழி விடைப் பெற்றுக் கொண்டதோடு வேதங்களின் கருத்துக்களும் முடக்கப்பட்டு விட்டன.

குர்ஆன் என்பது இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வேதமாகும். இதற்கு முன் வெளிபட்ட தவ்ராத் - இன்ஜில் போன்ற (இன்றைக்கு கிறிஸ்த்துவர்கள் வைத்திருக்கும் பழைய - புதிய ஏற்பாடுகளுக்கும் நபிமார்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் - இன்ஜில் ஆகியவற்றிற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை) வேதங்கள் காலாவதியாகி மக்களிடமிருந்து மறைந்துப் போனதற்கு அந்த வேதங்கள் இறங்கிய மொழிகளும் காரணமாகும். படிப்படியாக அந்த மொழிகள் வழக்கொழிந்துப் போனதால் அவற்றோடு வேதங்களும் சென்று விட்டன. குர்ஆன் என்பது இறுதி நாள் வரை நீடிக்க வேண்டிய ஒரு வழிகாட்டி என்பதால் அது இறங்கிய மொழியான அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.  அதை பாதுகாக்கும் வழிகளில் ஒன்று தான் தொழுகையில் அது இறங்கிய அதே வடிவில் அதே மொழியில் ஓதுவதாகும். அந்த வகையில் அரபு மொழிப் பற்று அவசியமாகின்றது.

இன்னும் கூடுதல் பற்று வேண்டும்.

ஆங்கிலம் மிக சமீபத்திய மொழியாகும். அது இன்றைய உலகை ஆளுமைப் புரிவதற்கு காரணங்கள் இரண்டு.

அந்த மொழியைப் பரப்புவதற்காக அந்த மொழிப் பேசக் கூடிய நாட்டவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி. அதற்கான அயராத உழைப்பு. அந்த முயற்சியும் உழைப்பும் தான் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாயுது காதினிலே' என்று மொழிப் பெருமைப் பேசும் நம் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் 'அம்மா அப்பா' என்று கற்றுக் கொள்வதற்கு முன் 'மாம் - டாட்' என்பதை சொல்லி சந்தோஷப்படுகிறது. மொழி நாகரீகம் என்பதே ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரியாதவன் நாகரீகக் குறைவு உடையவன்தான் என்ற மனநிலை உலகெங்கும் வியாபித்துப் போய்விட்டது. எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விரிந்துப் போயுள்ள மனித அறிவின் எல்லைகள் அனைத்தும் ஆங்கில மொழியின் உள்ளே தான் புதைந்துக் கிடக்கின்றன. எந்த நாட்டு எழுத்தாளராக இருந்தாலும் அவரது ஆக்கம் உலக அளவில் போக வேண்டும் என்றால் அது ஆங்கிலத்தில் இருந்தாக வேண்டும். புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் தனது படைப்புகளை இந்திய மொழிகளில் கொடுத்திருந்தால் இத்துனை சீக்கிரம் அவருக்கு 'புக்கர்' விருது கிடைத்திருக்குமா..?

     ஒருவன் ஆங்கிலம் பேசும் போது 'இவனுக்கு ஆங்கிலப் பற்று, ஆங்கில வெறி' என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு அந்த மொழி உலகின் இயல்பான வாழ்க்கைத் தரத்தைப் பெற்று விட்டது.

ஆங்கிலம் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கு எத்தகையக் காரியத்தையும் செய்யத் தயங்குவதேக் கிடையாது. அதாவது பிற மொழி வார்த்தைகளை தன்னோடு இணைத்துக் கொண்டு தன் பெயரை அதற்கு சூட்டிவிடுவதற்கு ஆங்கிலம் என்றைக்கும் வெட்கப்படுவதேக் கிடையாது. இன்றைக்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கும் அனேக ஆங்கில வார்த்தைகள் உண்மையில் அந்த மொழியின் வார்த்தைகளல்ல. பிற மொழிகளிலுள்ளவற்றை ஐக்கியப் படுத்திக் கொண்டதுதான்.

எந்த அளவிற்கு ஆங்கிலம் உலகை ஆதிக்கம் புரிகிறதோ அதை விட அதிகமாக இன்னும் முன்னேயே அரபி மொழி உலகை ஆதிக்கம் புரிந்திருக்க வேண்டும். காரணம் ஆங்கிலம் வெறும் மொழியாக மட்டுமே இருப்பது போன்று அரபு வெறும் மொழி மட்டுமல்ல அந்த மொழியில் மிகத் தெளிவான அர்த்தமுள்ள வாழ்க்கையொன்று புதைந்துக் கிடக்கின்றது.

குர்ஆன் வெளிப்பட்ட நாள் முதல் அதற்கு நிகராக உலகில் ஒரு வேதம் இல்லை. வருவதற்கும் வாய்ப்பில்லை என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் முஸ்லிம்களில் போதிய அளவு செல்வமும் நிறைந்த வாழ்க்கைத் தரமும் அதிகப்படியான நிலப்பரப்புகளையும் கொண்டவர்கள் அரபிகள். இருந்தும் அவர்களால் அரபியை ஓர் உலக மொழியாக ஆக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கும் நிலவரம் இதுதான். ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பாவது இம் முயற்சியில் அவர்கள் இறங்கி இருந்தால் இன்றைக்கு நீங்களும் நாமும் அரபி மொழியை முழுமையாக கற்றுக் கொண்டிருப்போம். அந்த மொழி நம்மிடையே பேச்சு வழக்கு மொழியாகி - தாய் மொழியின் இயல்பைப் பெற்றிருக்கும். அரபு மொழி ஆரம்பப் பள்ளியிலிருந்து மேற்படிப்பு வரை பாட திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தால் இந்தியா போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கும்.

அரபு, மத மொழியாக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மொழிக்கும் மத சாயம் பூசுவது முட்டாள்தனமானது என்பதை அறிவாளிகள் உலகில் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த மதத்திற்கும் எந்த மொழியும் சொந்தமில்லாத நிலையிலும் அரபு மொழிக்கும் - உருது மொழிக்கும் மத சாயம் பூசும் நிலை உருவாகி விட்டது. (உருது பற்றி நாம் இங்கு விவாதிக்க வேண்டாம்).

அரபி, பள்ளிப் பாடத்திட்டங்களில் இல்லாததால் அந்த மொழியை போதிப்பதற்கும் அந்த மொழியில் உள்ள இஸ்லாமிய கருத்துக்களை போதிப்பதற்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்கள் துவங்கப்பட்டன. தேசிய ஒருங்கிணைப்பு - நல்லக் கல்வித்திட்டம் - எதிர்கால வளர்ச்சி - போதிக்கும் முறைகளில் சீர்திருத்தம் என்று எது ஒன்றுமே அரபு மதரஸாக்களில் இல்லாததால் அவை மக்களிடம் எடுபடாமல் போய் விட்டன. (பாட திட்டங்களிலும் போதிக்கும் முறைகளிலும் மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கல்வியாளர்கள் உரத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் பழமை வாதிகளில் காதுகளில் அவை விழுவதேயில்லை).

அரபு ஒரு மதத்தின் மொழி என்ற நிலையைப் பெற்று விட்டதால் தான் அதில் உள்ள வார்த்தையைக் கூட மற்றவர்கள் தங்கள் வாய்களால் உச்சரிக்க மறுக்கிறார்கள். தமிழில் உள்ள 'வணக்கம்' என்ற வார்த்தையையும், சமஸ்கிரதத்திலுள்ள 'நமஸ்காரம்' என்ற வார்த்தையையும், ஆங்கிலத்திலுள்ள 'குட்மார்னிங்' என்ற வார்த்தையும் மரியாதைக்குரிய - வாழ்த்துக்குரிய வார்த்தைகளாக பார்ப்பவர்கள், அங்கீகரிப்பவர்கள் அரபு மொழியிலுள்ள 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்ற வாழ்த்து வார்த்தையை மட்டும் வாழ்த்தாக பார்க்காமல் ஒரு மத வார்த்தைப் போன்று, மத திணிப்புப் போன்று பார்க்கிறார்கள். அரபு நாடுகளில் வந்து பணம் சம்பாதித்து நல்ல நிலையிலிருக்கும் அன்னிய நாட்டு பிற மதத்தவர்களில் சிலர் திட்டமிட்டே அஸ்ஸலாமு அலைக்கும் போன்ற பொதுவான வார்த்தைகளை புறக்கணிப்பதை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

அரட்டை அரங்கத்தில் ஒரு முஸ்லிம் சலாத்தின் வழியாக 'விசு'விற்கு வாழ்த்து சொல்லும் போது விசுக்கென்று அவர் அதை மறுத்த விதத்தை நாம் மறக்க முடியாது. காரணம் அதை ஒரு மத வாழ்த்தாக அவர் நினைத்துக் கொண்டிருப்பதுதான்.

இந் நிலைக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும். அதை ஒரு மொழியாக மட்டுமே உலகம் பார்க்க வேண்டுமானால் தொழுகைப் போன்ற வணக்கங்களில் மட்டுமின்றி பொதுவாழ்க்கையிலும் அரபு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இது நம்மைப் பொருத்தவரை மிகக் கடினமான பணிதான் என்றாலும் அந்த சிந்தனையையாவது மக்களிடம் கொண்டு செல்வோம்.

நம் தேவைகளை இறைவனிடம் முறையிடும் போது நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் பிரார்த்தித்துக் கொள்ளலாம் அதற்கு தடையொன்றும் இல்லை.

--
ஜி என்

Friday, November 14, 2008

ஏன் இத்தனைத் திருமணம்?


கிறித்தவ நண்பர் ஒருவர் நபி(ஸல்) அவர்களின் திருமணங்களைப் பற்றி கீழ் கண்ட வினாக்களை எழுப்புகிறார்;.

இறைத்தூதர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் போது ஒன்று - இரண்டு திருமணங்கள் மட்டும் செய்திருக்கலாம். 11 திருமணங்கள் முடித்ததால் அதையே காரணங்காட்டி அரபுகள் 3 - 4 திருமணம் முடித்து அநீதம் இழைக்கிறார்கள் என்கிறார்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்த பெண்களை திருமணம் முடிக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கிறார் இது பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்  முபாரக் அலி - யாஹூ மெயில் வழியாக.

அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 - 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.
 
فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً

'....பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவே - நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்....' (அல் குர்ஆன் 4:3)

அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.

இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ததால் தான் முஸ்லிம்கள் பலதாரமணம் செய்கிறார்கள் என்று அந்த கிறித்துவ சகோதரர் விளங்கி இருப்பது தவறு என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருந்தபோதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.

நான்கு திருமணங்கள் செய்பவர்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதமும் தவறு. ஒரு மனைவியோடு வாழ்பவர்கள் தங்கள் மனைவிகளுக்கு அநீதியே இழைப்பதில்லை என்று யாராவது சான்றிதழ் கொடுக்க முடியுமா... அநீதி இழைத்தல் என்பது  ஆண்களின் மன நிலையைப் பொருத்ததாகும். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து பல மனைவியரோடு அவர்களுக்கு மத்தியில் பேதம் பாராட்டாமல் - பாராபட்சம் காட்டாமல் -  சமமாக நடக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். சமூகத்திற்கோ - சட்டத்திற்கோ பயந்து ஒரு திருமணம் செய்து மனைவி வீட்டில் இருக்கும் போது அன்னிய பெண்கள் மீது கையை வைக்கும் கெடுமதியாளர்களும் ஆண்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். (பலதாமணம் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடியதா... என்ற விவாதத்திற்கு உள்ளே நாம் செல்லவில்லை காரணம் கேள்வி அதுபற்றியதல்ல)

பலதாரமணத்தில் மட்டும் அநீதி இருக்கிறது என்று கூறுவது ஆண்களின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்தப் பெண்களைத் திருமணம் செய்ததற்குரிய காரணங்களை விளங்க வேண்டுமானால் அந்த திருமணங்களின் பின்னணியை நாம் விளங்க வேண்டும். அது விரிவாக விளக்கப்பட வேண்டிய வரலாறாகும்.

சுருக்கமாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால்,

முதிர்ந்த வயது என்பது சமூகத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்டு அவலங்களை சந்திக்கக் கூடிய - பிறரது அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் மனம் விரும்பக் கூடிய ஒரு வயதாகும். இறைத் தூதர் வயது முதிர்ந்தப் பெண்களை திருமணம் செய்ய முன் வந்ததும் அந்தப் பெண்கள் மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் இந்த பின்னணியைக் கொண்டதாகும் இது முதல் காரணம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது ஆட்சியாளரின் கடமையாகும் என்பதை மிக அழுத்தமாக உலகில் உரைத்து அதை செயலாக்கப்படுத்திக் காட்டியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். அன்னியப் பெண்ணாக வைத்து ஆதரவு அளிப்பதை விட சொந்த மனைவியாக்கிக் கொண்டு ஆதரவளித்தால் அந்தப் பெண்களால் கூடுதல் பலன் பெற முடியும் என்பதால் மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதர ஆட்சியாளர்கள் இதே வழியைப் பின்பற்றலாமா என்றால் அனுமதிக்க முடியாது. ஏனெனில் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெறும் ஆட்சியாளரா