வலைப்பதிவில் தேட..

Wednesday, November 5, 2008

வெளியில் செல்லும் பெண்

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பரின் மனைவி தன்தாய்வீட்டாரோடு சொந்த நாட்டில் வசிக்கிறாள். அவள் வெளியிடங்களுக்கு தன் சகோதரனோடு சென்றாலும் கணவனின் முன்அனுமதியில்லாமல் சென்று வருகிறாள். இதுபற்றி நண்பர் ஏதாவது கேட்டால் சகோதரனுடன்தானே வெளியில் செல்கிறேன் அதனால் முன் அனுமதிபெற்றுதான் செல்லவேண்டும் என்பதில்லை என்று வாதாடுகிறார்;. இதனால் தமக்கிடையே எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாதே என்ற மன அச்சத்தில் நண்பர் இப்போது எதுவுமே கண்டுகொள்வதில்லை.
 
இது சரியா? தவறா? குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் தேடுகிறேன்.
 


அஸ்ஸலாமு அலைக்கும்.
 
ஒரு பெண் தன் தாய் வீட்டில் இருந்தாலும் சரி, கணவனுடன் இருந்தாலும் சரி தனது தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது கணவனின் அனுமதிப் பெற்றுதான் செல்ல வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனைனயும் விதிக்கவில்லை.
 
திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட ஆண் துணையுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றே சொல்கின்றது. இதுவும் கூட பொது நிபந்தனையல்ல.
 
‏حدثنا ‏ ‏إسحاق بن إبراهيم الحنظلي ‏ ‏قال قلت ‏ ‏لأبي أسامة ‏ ‏حدثكم ‏ ‏عبيد الله ‏ ‏عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏
‏أن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي ‏ ‏محرم

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண் பயணம் மேற்கொள்ளக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)
 
 
மூன்று நாள் பயண தொலைவு என்பதை இன்றைய பயணம் என்று நாம் கருதிக் கொள்ளக் கூடாது.  இன்றைய நிலையில் மூன்று நாட்களில் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று வந்து விடலாம்.  நபி(ஸல்) காலத்தின் பயண தொலைவையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
நீண்ட தூரப்பயணங்களுக்கு அவர்கள் ஒட்டகத்தையே பயன்படுத்தி வந்தார்கள்.  மூன்று நாள் பயண தூரம் என்பது அதிகப்பட்சமாக 70 கிமி முதல் 100 கிமிக்குள் இருக்கலாம். 
 
இந்த அளவு சரி என்றால் 70 கிமீ கடந்து செல்லும் ஒரு பெண் தக்க துணை (அதாவது திருமணம் செய்யஹராமாக்கப்பட்ட துணையுடன்) செல்ல வேண்டும்.   அக்கம் பக்கம் ஊர்களுக்கு செல்வதாக இருந்தால் இந்த நிபந்தனையைக் கூட பொருத்த முடியாது.
 
ஹஜ் செய்வது இதிலிருந்து சிலருக்கு விலக்கு பெறும்.  ஹஜ் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் கிளம்பினால் துணையில்லாமல் கூட செல்லலாம்.
 
மார்க்க அடிப்படையில் ஒரு பெண் கணவனிடம் அனுமதிப்பெற்று செல்ல வேண்டும் என்று கட்டளை இல்லையென்றாலும் புரிநதுணர்வு அடிப்படையில் கணவன அவ்வாறு விரும்பும் போது சொல்லி விட்டு செல்லலாம்.
 
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
 
(மனைவிகள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு (மனைவிகளுக்கு) ஆடையாகவும் இருக்கிறீர்கள் (அல்குர்ஆன் 2:187) என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான்.
 
இது கணவன் மனைவிக்கான நட்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் தத்துவமாகும்.  புரிந்துணர்வு வெளிபாட்டின் அடையாளமாகும்.  'தன் மனைவி வெளியில் செல்லும் போது தன்னிடம் சொல்லி விட்டு செல்ல வேண்டும்' என்று கணவன் விரும்புவது தவறல்ல.  அதற்கு பல காரணங்கள் கணவனிடம் இருக்கலாம்.
 
சொல்லி விட்டு செல்லும் மனைவியின் மீது கணவனுக்கு அன்பு அதிகரிக்கத்தான் செய்யும்.  இதை மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும்.  கணவனிடம் சொல்லிவிட்டு செல்வதால் அவர்களுக்கொன்றும் இழப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை.  (இது அலைப்பேசிகளின் ஆதிக்கக்காலம் என்பதால் சொல்லிவிட்டு கிளம்புவதற்கு ஒரு நிமிடம் போதும்)

--
ஜி என்

No comments: