வலைப்பதிவில் தேட..

Tuesday, June 10, 2008

சின்ன - பெரிய ஷிர்க்

எனது கேள்வி.
சின்ன ஷிர்க் என்றால் என்ன? பெரிய ஷிர்க் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Name: ansar a rahman
email:
abdul.ansar@......
Location: sri lankan
Subject: Kelvi

இணைவைப்பு என்ற ரூபத்தில் வந்தாலும் அது கொடியதாகும். இணைவைப்பு குறித்து முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடனும், அதன் விளைவுகள் குறித்த அறிவு - பயத்துடனும் இருக்க வேண்டும்.

பெரிய இணைவைப்பு.

பகிரங்கமாக, வெளிப்படையாக, அறிந்தோ அறியாமலோ செய்யும் சில காரியங்கள்.
இறைவனைத் தவிர பிற அவனது படைப்புகளை அல்லது இறைவனுடன் அவனது படைப்புகளை வழிபாட்டுக்குரியதாக - வணக்கத்துக்குரியதாக ஆக்கிக் கொள்வது.
மனிதர்கள் (அது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களாக இருந்தாலும் சரியே).
வானவர்கள் (மலக்குகள்),
ஜின்கள், (தேவதைகள்)
சிலைகள் (அது கடவுள் என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சரி, மரியாதைக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சரி)
மிருகங்கள், பசு வழிபாடு போன்றவை
இடங்கள் (பூமியின் பல்வேறு இடங்கள் புனிதமாக கருதப்படுவது - பூமித்தாய் என்று போற்றி அதை வணங்குவது)
மனிதப்படைப்புகள் (ஆயுதபூஜை போன்றவை)
சமாதிகள், தர்காக்கள், மடங்கள்

இப்படி வெளிப்படையாக வழிபடப்படும் அனைத்தும் 'பெரிய இணைவைப்பு' என்ற கொடிய செயலில் அடங்கி விடும். இது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' 'வணக்கத்துக்குரியவன் ஏகனைத் தவிர வேறொன்றும் இல்லை' என்ற இஸ்லாத்தின் ஆணிவேரான கொள்கைக்கு முற்றிலும் மாற்றமானதாகும். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் இந்த கொடிய செயலுக்கு எதிராகவே தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார்கள். இந்த இணைவைப்பு குறித்து போதுமான விளக்கங்கள் பல வழிகளில் மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டு வருகின்றன.

சிறிய இணைவைப்பு

முஸ்லிம்கள் அதிகமாக அஞ்சி தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாகும். அரபியில் 'ரியா' என்று குறிப்பிடப்படும் சிறிய இணைவைப்பு குறித்து நபி(ஸல்) மிகுந்த எச்சரிக்கையுணர்வை ஊட்டி சென்றுள்ளார்கள்.

எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது நபி அவர்கள், 'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அஹ்மத்.

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார். என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.அபூதாவூத், இப்னு மாஜா.

'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தெரிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கரித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். அபூஸயீத்(ரலி) இப்னுமாஜா.

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார்.

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும்। அல்குர்ஆன் 17:18-19

உங்களில் அழகிய செயலுக்குாியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன். (திருக்குர்ஆன் 67:2)

பேருக்காக, புகழுக்காக, பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, இன்னபிற உலக அற்ப நோக்கங்களுக்காக செய்யப்படும் எந்த காரியமும் - அமலும் - சிறிய இணைவைப்பு என்ற அந்த பாவத்தை ஏற்படுத்தி விடும்.

முஸ்லிமின் நோக்கம் மறுமையாக இருக்க வேண்டும். உலகின் எந்த நோக்கத்தையும் பிரதானமாக கருதாமல் மறுமைக்காக வாழும் வாழ்க்கை ஒன்றே சிறிய இணைவைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

இறைவன் நம் எண்ணங்களை தூய்மையாக்கி வைப்பானாக.

No comments: