வலைப்பதிவில் தேட..

Tuesday, June 10, 2008

யாருக்கு சொத்து?

நான் இறந்த பின் எனது சொத்துக்களை (வங்கி இருப்பு, சொத்துக்கள், மரணக்காப்பீடு) இது போன்றவற்றை நான் என் மனைவிக்கும் என் சகோதரிக்கும் கொடுக்கலாமா? எவ்வாறு செய்வது? சிலர் கூறுகிறார்கள் இஸ்லாத்தில் இது அனுமதியில்லையென்று. நான் அவற்றை ஒருவருக்கே கொடுக்க மணமில்லை. தங்களிடமிருந்து தெளிவான பதில் தேவை.

Name: Mohamed Ibrahim
email:
ibrm@.....
Location: Dubai
.....................................

எந்த ஒரு முஸ்லிமும் தான் இறந்த பிறகு தனது சொத்தை இந்த வகையில் பிரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்ல முடியாது. சொத்துக்கு யாரெல்லாம் வாரிசுதாரர்களாவார்களோ அவர்களையும் அவர்களுக்குரிய அளவையும் இறைவன் தெளிவாக பட்டியலிட்டு விட்டதால் அவர்களுக்கு நாம் உயில் எழுதி வைக்க முடியாது. எழுதி வைத்தாலும் இஸ்லாமிய நீதிமன்றங்களில் அவை செல்லாது.
ஒருவர் இறந்த பின் அவரது வாரிசுதாரர்கள் யார் யார் என்பதை குர்ஆன் அடிப்படையில் நீதிமன்றம் அணுகி அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். (அதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால்).
பாகப்பிரிவினைப் பற்றிய வசனங்களைப் படியுங்கள்.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்:4:11)
இறந்துப் போனவர் விட்டு சென்றது என்று இறைவன் சுட்டிக் காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும். விட்டு செல்லக் கூடிய சொத்து எதுவாக இருந்தாலும் - நிலங்கள், பத்திரங்கள், வீடுகள், வருமானம் வரும் பிற கட்டிடங்கள், வங்கி வைப்புகள் உட்பட - அனைத்துக்கும் இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள அவர்கள் வாரிசுதாரராகி விடுவார்கள்.
இவர்களல்லாத பிறருக்கு வேண்டுமானால் 'மரணசாசனம்' எழுதி செல்லலாம். உண்மையில் உங்கள் சொத்தை பிறருக்கு ஓரளவு கொடுக்க வேண்டு்ம் என்று நீங்கள் விரும்பினால் அதை நீங்கள் உயிருடன் இருக்கும் போதே எழுதி அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதாவது அது அவர்களின் சொத்தாகி விட வேண்டும்.
விபரம் போதவில்லையென்றால் எழுதுங்கள்.

No comments: