வலைப்பதிவில் தேட..

Monday, December 22, 2008

"ஸல்" "அலைஹி" உங்களுக்கும் தான்.

ஸலாமுன் அலைக்கும்.
 
பொதுவாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்டுரைகள் எழுதும் போது இறைத்தூதர்களையோ முஸ்லிம் பெரியார்களையோ குறிப்பிடும் போது பெயருக்கு பக்கத்தில் சுருக்கமாக சில எழுத்துக்களை எழுதுவார்கள். பலருக்கு இது குறித்து சந்தேகம் மற்ற சிலர் விரும்பியவாரு விளக்கங்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே அது குறித்த விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கிறோம்.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்

எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

(ஸல்)

இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தப்புப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.

ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.
 

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்த விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)

நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)

என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.

எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.

நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(அலை)

இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.

நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا

(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)

நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.

ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.

இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.

ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(ரலி)

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் ரலியல்லாஹு அன்ஹு என்பதை நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் இறைவனின் இந்த வசனங்கள் தான்.
 

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (அல்குர்ஆன் 9:100) 

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)

முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)

இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.

சரி, நபித்தோழர்களல்லாத பிறருக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா.. அடுத்து வரும் வசனங்களைப் பார்ப்போம்.

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)
 

قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ

நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 3:15)
 

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)

மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ரஹ்மதுல்லாஹி அலைஹி

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்

மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுவோர் எழுதவும்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Sunday, December 14, 2008

ஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும் (10 நன்மைகள்)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (20 நன்மைகள்)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு (30 நன்மைகள்)
 
என்ற நிலையில் ''ஸலாம்" என்ற வார்த்தைக்கு மட்டும் எத்தனை நன்மைகள் என்று தெரிந்தால் மற்றவர்களும் அதை பயன்படுத்தலாமே. மேலும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? அல்லது அவர்கள் ஸலாம் கூறினால் பதிலாவது சொல்லலாமா?
 
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா
........................
 
பொதுவாக ஸலாமை பொருத்தவரை நாம்,
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
 
என்று மூன்று விதங்களில் சொல்லி பழகி விட்டதால் நாம் எழுதிய "ஸலாம்" என்ற ஒற்றைச் சொல் நெருடலாகவும், சிலருக்கு ஆச்சரியமாகவும் கூட இருக்கலாம்.
 
ஆனால் நாம் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை புரிய வைப்பது கடமை என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
 
முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த ஸலாமை சொல்வது போன்றே குர்ஆனில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ள ஸலாமையும் நாம் பயன்படுத்தலாம். அதுவும் ஸலாமை பரப்பியதாகவே அமையும்.
 
"அஸ்ஸலாமு அலைக்கும்" போன்று "ஸலாமுன் அலைக்கும்" என்றும் "ஸலாம்" என்றும் பயன்படுத்தலாம்.  இவை அனைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய ஸலாமின் உள்ளே அடங்கி விடும்.
 
ஸலாம்
 
َلَقَدْ جَاءتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُـشْرَى قَالُواْ سَلاَمًا قَالَ سَلاَمٌ فَمَا لَبِثَ أَن جَاء بِعِجْلٍ حَنِيذٍ
 
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து 'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்"  என்றார்  (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
 
இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்த வானவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.  பதிலுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையையே பதிலாக்கியுள்ளார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.  (இப்படி சொல்வது தவறென்று எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை)  எனவே குர்ஆனின் வழிகாட்டல் அடிப்படையில் "ஸலாம்" என்ற வார்த்தையை மட்டும் கூட பயன்படுத்தலாம் என்பதை விளங்கலாம்.
 
திருக்குர்ஆனில் ஸலாம் என்ற வார்த்தையே அதிகமான இடங்களில் (முகமனுக்காக) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு கூடுதலாக நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 
.........................
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
ஸலாம் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அது முழுமையான ஸலாம் சொன்ன பரக்கத் கிடைக்கும். மேலும், மாற்று மத சகோதரர்கள் ஸலாம் சொன்னால் நாம் பதில் சொல்வது கூடும். அதுபோல நாமும் அவர்களுக்கு ஸலாம் கூறலாம். அல்லாஹ் அஃலம்.
 
முஹம்மது இக்பால் - ஷார்ஜா,யு.ஏ.இ
.........................
ஸலாமுன் அலைக்கும்.
 
நாம் செய்யும் எல்லா அமல்களுக்கும் அதற்காக சொல்லப்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்தால் "இத்துனை நன்மை" "இவ்வளவு நன்மை"  என்று சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை நாம் செய்யாமல் இருந்து விட முடியுமா..?
 
நீங்கள் குறிப்பிட்டுள்ளப்படி ஸலாம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அந்த நன்மைகளோ அல்லது சற்று குறைவாகவோ "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையிலும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ள வார்த்தையாகும்.
 
குர்ஆனோடு ஒப்பிடும் போது ஹதீஸ்களில் சில விதிவிலக்கு, அல்லது மாற்று வியாக்யானங்கள் கொடுக்கலாமே தவிர ஹதீஸ்களோடு ஒப்பிட்டு குர்ஆன் வசனங்களுக்கு விதிவிலக்கோ - வியாக்யானங்களோ கொடுக்க முடியாது.
 
எனவே குர்ஆனில் ஒரு கட்டளை ஒரு தூண்டுதல் வந்துள்ள போது ஹதீ்ஸ்களை ஒப்பு நோக்கி குர்ஆன் வசனங்களை சற்று பின்னுக்கு தள்ளும் போக்கு கடுகளவும் நம்மிடம் வந்து விடக் கூடாது.
 
குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்.
 
10, 20, 30 நன்மைகள் என்று ஹதீஸ்களில் வழிகாட்டுதல் உள்ளதால் அவ்வாறும் கூறிக் கொள்ளலாம்.
 
மாற்றாருக்கு ஸலாம்.
 
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
 
மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை அனுமதித்தே வந்துள்ளது.
 
மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்
 
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
 
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
 
"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல.  எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
 
இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும் செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது.   (அல்லாஹ் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
......................
 
ஸலாத்தின் சிறப்பு குறித்து இன்னும் சில அறிவிப்புகள் உள்ளன அவற்றையும் அறிந்துக் கொள்வோம்.
 
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
 
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்.
 
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
 
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி,  திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம்.
 
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
 
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள். ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, இப்னுஹிப்பான், ஹாகிம்.
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Tuesday, December 2, 2008

'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!

ஊருக்கொரு அரஃபாதினமா..? ஆதாரங்கள் என்ன சொல்கின்றது?

ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.

அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.

இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.

இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.

இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.

திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் அரபுவாசகத்திற்கு கிளிக்

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்)  இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.

صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده


அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

அரஃபா இடமும் - தினமும்.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம் வந்தார்கள். 'நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

நபி(ஸல்) அரஃபாவில் தங்கினார்கள். இதுதான் அரஃபா, அரஃபா முழுவதும் தங்குவதற்கான இடமாகும் என்று குறிப்பிட்டார்கள்.

அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று தெளிவாக இறைத்தூதர் குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும்.

அந்த நாளில் அரஃபா பெருவெளியில் இருப்பவர்கள் நோன்பிருக்கக் கூடாது. நபி(ஸல்) அரஃபாவில் இருக்கும் போது நோன்பை விட்டு விட்டார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

என்றைக்கு அரஃபாவில் இருப்பவர்கள் நோன்பு நோற்கவில்லையோ அன்றைக்கு அரஃபாவிற்கு வெளியில் இருப்பவர்கள் நோன்பிருப்பது சுன்னத்தாகும். இது துல்ஹஜ் பிறை 9 அன்று நிகழ்வதாகும். இதையே நபி(ஸல்) துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்று அவர்களின் துணைவியர் அறிவிக்கிறார்கள். இதுவே முரண்பாடற்ற முடிவாகும்.

அரஃபா மைதானத்தில் மக்கள் கூடுவதையும், அவர்கள் நோன்பில்லாமல் இருப்பதையும் உலக மக்கள் அறியும் நிலையில் இன்றைக்கு எங்கள் பகுதிக்கு அரஃபா இல்லை என்று ஒரு சாரார் கூறுவதும், இன்றைக்கு நோன்பு வைப்பது சுன்னத்தல்ல என்று அறிவிப்பதும் பொருத்தமானதுதானா... என்பதை மக்கள் சிந்திக்கட்டும்.

அரஃபா மைதானத்திலிருந்து மக்களெல்லாம் புறப்பட்டு முஸ்தலிபா சென்றபிறகு இதுதான் அரஃபா நாள் (சில பகுதிகளில் இரண்டு நாட்கள் கழித்து இதுதான் அரஃபாநாள் என்று அறிவிப்பு) என்று சொல்லுவது எந்த அளவு நியாயமான வாதம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணமும், பிறையும்.

இஸ்லாத்தில் பல வணக்கங்களுக்கு பிறை முக்கிய அடையாளமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று ஹஜ்ஜாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பதில் முக்கிய முதலிடத்தில இருப்பது பிறையாகும்.

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அது மக்களுக்கு நாட்களையும், நேரத்தையும் காட்டி, ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று கூறும். (அல்குர்ஆன் 2:189)

பிறை பிறந்து ஹஜ்ஜு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பகுதிப் பிறையை ஒருவர் ஹஜ்ஜுப் பிறையாக கணக்கெடுத்தால் அவரால் ஹஜ் செய்ய முடியுமா...?

ஹஜ் என்பதே அரபா தான். யாரேனும் முஸ்தலிபாவில் தங்கும் (பத்தாம் - பெருநாள்) இரவின் பஜ்ருக்கு முன்பாக அரபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜைப் பெற்றுக் கொள்கிறார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உர்வாபின் முளர்ரிஸ் (ரலி) திர்மிதி அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா)

ஹஜ் என்பது முழுக்க முழுக்க அரபாவை (அரஃபா இடத்தை அடைவதை) சார்ந்தது என்று இந்த செய்தி மீண்டும் அறிவிக்கின்றது.

அந்தந்தப் பகுதி பிறை அடிப்படையில் அரஃபாவை தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்பவர்களில் ஒருவர் அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்கு சென்றால் ஹஜ் கூடிவிடும் என்ற அடிப்படையில் அவருடைய அரஃபா நாளில் அரஃபா செல்கிறார் (உதாரணமாக ஒருநாளோ, இரு நாளோ கழித்து பிறையைப் பார்த்து ஹஜ்ஜை தீர்மானிக்கும் ஒரு இந்தியர்) என்றால் அவரால் அரஃபாவை அடைய முடியுமா...? அவர் செல்லும் நாளில் அரஃபா வெறிச்சோடி கிடக்கும். அவரது ஹஜ் கனவும் வீணாகி போகும்.

மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் அரஃபா நாளில் அங்கு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளாத எவருக்கும் ஹஜ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தெளிவான நிலையில், ஹஜ் கிடைக்க வேண்டும் என்றால் தங்கள் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற முரணான போக்கை விட்டொழித்து குர்ஆனின் கட்டளைப்படி பிறை ஹஜ்ஜை அறிவித்து விட்டவுடன் அதைப் பின்பற்றியாக வேண்டும். பிறை பிறந்து ஹஜ்ஜை அறிவித்து அதே பிறை அரஃபாத்தையும் அறிவித்து அரஃபாவில் மக்கள் கூடி அவர்கள் நோன்பில்லாத நிலையில் அதே நாளில் பிறர் நோன்பு வைப்பதே அரஃபா நோன்பாகும். அதுவே சுன்னதாகும்.

அவர்கள் அரஃபாவை கடந்து, பெருநாள் தினத்தில் நுழைந்து பெரும் பகுதியினர் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இதுதான் எனக்கு அரஃபா தினம் என்று கூறுபவர்கள் அந்த முடிவை குர்ஆன் சுன்னாவிலிருந்து விளங்கி பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

மக்கள் அரஃபா தினத்தில் குழுமி இருக்கும் அதே நாளில் நோன்பிருப்போம். சுன்னாவை சுன்னாவாக பின்பற்றுவோம். இறைவன் அருள் புரியட்டும்
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

Monday, December 1, 2008

கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும்.
கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்? மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும். --ஹஸன் கமருதீன்
 
வஅலைக்குமுஸ்ஸலாம்.
 
முஸ்லிம் உம்மத்தில் நடந்த வரலாற்று சோகங்களில் ஒன்று கர்பலா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நடந்த போர்.  இந்த போர் மற்றும் போரின் விளைவு குறித்து அன்றிலிருந்து இன்றுவரை உலகலாவிய முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் நடந்து வந்தாலும் "கர்பலா நிகழ்வை ஒரு அரசியல் நிகழ்வாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பது நமது நிலைப்பாடாகும். 
 
நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா (July 23, 645  - 683) என்பவரால் நடத்தப்படுகின்றது.   யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை.  அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார்.  அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.   (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)
 
ஒரு அரசியல் நிகழ்வாக நடந்து முடிந்த இந்த சம்பவத்திற்கு ஷியாக்கள் வேறு வடிவம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். இன்றுவரை அந்த அரசியல் நிகழ்வை இஸ்லாமிய நிகழ்வாகவே காட்டி வருகிறார்கள். 
 
இஸ்லாமிய வரலாற்றில் உலக முஸ்லிம்களின் இரண்டாம் தலைவராக ஆட்சிப்புரிந்து வந்த உமர்(ரலி) அவர்கள் ஒரு மடையனால் (அவன் முஸ்லிம் அல்ல)  கொலை செய்யப்பட்டபோது உமர்(ரலி) அவர்களின் இடத்தை நிரப்ப (அதாவது முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை பொறுப்பேற்க) அலி(ரலி) அவர்களே அன்றைய ஆலோசனைக் குழுவினரால் முன்மொழியப்பட்டார்கள்.  அலி (ரலி) அந்த பொறுப்பை ஏற்க மறுத்தவுடன் பொறுப்பு உஸ்மான்(ரலி) அவர்களிடம் செல்கின்றது.  (இந்த சம்பவம் புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது)  அந்த சம்பவத்தின் முக்கிய இடத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
 
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3699
 
அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்' என்று கூறினார்ள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலி அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். பிறகு தல்ஹா(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்' என்று கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்முhன் - ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)' என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்' என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்' என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
முதலில் ஆட்சிப் பொறுப்பு அலி (ரலி) அவர்களிடமே கோரப்படுகின்றது.  பிறகே உஸ்மான் (ரலி) அவர்களிடம் செல்கின்றது.  ஆட்சிப் பொறுப்பை முன் மொழிந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களையடுத்து தனது முதல் ஒப்புதலை( இன்றைய ஓட்டெடுப்பு முறை) ஜனநாயக முறையில் அலி (ரலி) அவர்களே செலுத்துகிறார்கள்.  ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்கெடுப்பிலும் கருத்து வேறுபாடின்றி உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி அமைகின்றது.   உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான கருத்தோட்டங்கள் துவங்கி வலுபெற்று கடைசியில் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையில் அது முடிகின்றது.  அவர்களின் இடத்தை அலி(ரலி) நிரப்புகிறார்கள்.  
 
ஒரு ஜனாதிபதியின் கொலை, அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியின் பதவிஏற்பு என்று சூழ்நிலையின் கடினம் மக்களை பலவிதமாக சிந்திக்க வைத்து அவை முஸ்லிம் உம்மத்தின் பிரிவினையாக உருவெடுக்க வைத்து விட்டது.  அதன் தொடர்ச்சியாக நடந்ததே கர்பலாவாகும்.   வரலாற்று சம்பவங்களை ஊன்றி படிப்பவர்களுக்கு, அந்த வரலாறு குறித்து சிந்திப்பவர்களுக்கு "கர்பலா என்பது ஒரு அரசியல் நிகழ்வு" என்பது தெளிவாக விளங்கும்.
 
அதை ஒரு அரசியல் நிகழ்வாகவே சில முக்கிய நபித்தோழர்களும் பார்த்தார்கள். அதனால் தான் யஸீத் பின் முஆவியாவின் ஆளுமைக்கு எதிரான கிளர்ச்சி துவங்குவதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆட்சியாளராக இருந்த யஜீதையே அவர்கள் ஆதரித்தார்கள்.  இதற்கான சான்றை பார்த்து விட்டு தொடர்வோம்.
 
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7111 

 நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, 'மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார்கள்.
 
யஜீதின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் அவரது ஆட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நடக்கத் துவங்கிய போது மிக சிறந்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள் என்பதும், யஸீதின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வது நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறி அதற்கு சான்றாக நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை சமர்பித்ததுத் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கதாகும்.    
 
ஒரு ஆட்சியாளரின் ஆட்சிக்கு கீழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கும் போது அங்கு வேறு ஆட்சியாளரை கொண்டு வர முயற்சிப்பது, உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்றவை இறையாண்மைக்கு எதிரானது என்று இஸ்லாம் சொல்கின்றது.
 
سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
 
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
 
இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குழப்பம் விளைவிப்பவர்கள் முஸ்லிமா அல்லது பிறரா என்று பார்க்கப்படமாட்டார்கள். ஆட்சியாளர்கள் அவர்களை குழப்பக்காரர்களாகவே பார்ப்பார்கள்.   அத்தகைய குழப்பம் விளைவதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.  இப்னு உமர் (ரலி) அவர்கள் யஜீத் பின் முஆவியாவை யஜீத் என்ற தனிமனிதனாகப் பார்க்கவில்லை. அவர் ஒரு ஆட்சித்தலைவர் என்றே பார்க்கிறார்கள்.  நமது நிலைப்பாடும் அதுதான்.
 
ஷியாக்களால் வன்மையாக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பக்கங்களை கருத்தில் கொள்பவர்கள்தான் கர்பலாவை உலகலாவிய துக்க இடமாகவும், துக்க தினமாகவும் பார்ப்பார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
-
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)