வலைப்பதிவில் தேட..

Tuesday, March 10, 2009

பரிசுபெற்றக்கட்டுரை. (குழுமத்திலிருந்து)


ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?
 
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

 

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

 

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

 

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.

இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.

***

கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்

ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. 

 
 
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான கட்டுரை.
 
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
 
 
 
அன்புடன்
ஹஸன் கமருதீன்.

Tuesday, March 3, 2009

ஜின்கள் பற்றிய கேள்வி


From: hussain_71 Date: 2009/3/1
To: நமக்குள் இஸ்லாம் <fromgn@googlegroups.com>


அஸ்ஸலாமு அலைக்கும்

ஜின்கள் பற்றி விளக்கவும்?

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/3/3
To: fromgn@googlegroups.com

ஜின்கள் பற்றி நாம் விரிவாக அறிந்துக் கொள்வோம்.

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களையும் - ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

இந்த இனம் மனிதர்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்ததா...என்றால் சிலர் அப்படிக் கூறினாலும் அதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.  ஆதம் (அலை) படைக்கப்பட்டு அவருக்கு ஸூஜூது செய்ய இறைவன் கட்டளையிட்டபோது ஷெய்த்தான் மறுத்து ஆணவம் கொண்டான் என்பதை நாம் அறிவோம். இப்லீஸ் - ஷெய்த்தான் போன்ற பெயர்களால் குறிப்படப்படும் அந்த மனிதமகா எதிரிகள் தனி படைப்பல்ல அவைகளும் ஜின் இனத்தை சார்ந்தவைகள்தான்.

(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)

ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதற்கு ஷெய்த்தான் எடுத்து வைத்த வாதம், தான் ஜின் இனத்தை சார்ந்தவன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)

நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.

இந்த ஜின் கூட்டம் முழுவதும் மலக்குகளுடன் இருந்துள்ளார்கள் என்ற விபரத்தை ஆதமுக்கு ஸூஜூது செய்யுங்கள் என்று கூறும் இறைவசனங்களிலிருந்து - சிந்திக்கும் போது - விளங்கலாம்.

மலக்குகளை நோக்கி நாம் சொன்னோம் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று. (அல் குர்ஆன் 2:34 இன்னும் பல இடங்களில் இந்த சம்பவம் இடம் பெறுகிறது)

நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்று நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 2:38)

'அனைவரும் இறங்கி விடுங்கள்' என்ற வார்த்தை மலக்குகளை விடுத்து மற்ற ஜின் இனத்திற்கும் ஆதம் - ஹவ்வா ஆகிய மனித இனத்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.

இதுவரை நாம் கண்ட விபரத்தின் சுருக்கும் என்னவென்றால்

மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது

அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.

ஷெய்த்தான் - இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.

ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.

ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.

இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.

அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்

(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே!  உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)

ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.

இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள் வந்தார்கள் என்பது முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு தான். முஹம்மத்(ஸல்) மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின் இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் மனித - ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும். 

இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் - வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் - பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் - ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்த சந்திப்பு.

(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் - நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30)

எங்களுடைய கூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரை ஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான். நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும் கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)

ஆனால் எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)

இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ - குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை 72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் - காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.

46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.

ஜின்களுக்கும் தூதுத்துவ செய்தியை எடுத்துக் கூறும் பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு ஜின்களின் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து - அழைத்து சென்ற விபரம் முஸ்லிம் - திர்மிதி - அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் - ஜின்களின் காலடி சுவடுகள் - அவர்கள் சமைத்த பாத்திரங்கள் - அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)

இந்த சந்திப்பிற்கு பிறகு தான் நபி(ஸல்) கீழ் கண்ட அறிவிப்பை செய்கிறார்கள்.

நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா - இப்னு உமர் - ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் - திர்மிதி - அபூதாவூத் - ஹாக்கிம்)

ஜின்களும் - சுலைமான் (அலை) அவர்களும்.

தாவூத்(அலை) அவர்களின் மகனான சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் வல்லமை மிக்க அரசாங்கத்தையும் - ஆற்றல் மிகுந்த வலிமையையும் - மெய் சிலிர்க்கக் கூடிய மொழியாற்றலையும் கொடுத்திருந்தான். இவற்றிர்க்குரிய ஆதாரங்களை முதலில் அறிவோம்.

சுலைமானுக்கு நாம் கடுமையாக வீசும் காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவரது ஏவலின் படி பாக்கியம் பொருந்திய பூமிகளுக்கு அவரை எடுத்துச் செல்லும். (அல் குர்ஆன் 21:81)

ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)

சுலைமானுக்கு ஜின்கள் - மனிதர்கள் - பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)

எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ஓ! எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாத விதத்தில் உங்களை நசுக்கி விடாதிருக்க... என்று கூறிற்று. இதைக் கேட்டு (சுலைமான்) அவர் புன்னகைத்தார் (அல் குர்ஆன் 27:18 - 19)

சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)

இந்த வசனங்கள் அனைத்தும் சுலைமான்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அருட்கொடையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு மட்டும் இப்படிப்பட்ட அருட்கொடை கிடைக்கக் காரணம் என்ன?

அவர்கள் இறைவனிடம் முறையிட்ட முறையீடுதான்!

எனக்கு பின்னர் எவருமே அடைய முடியாத ஒரு அரசாங்கத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய் என்று கூறினார் (அல் குர்ஆன் 38:35)

சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு பின் எவருமே அடைய முடியாத பெரும் அரசாங்கத்தை அவர்களுக்கு வழங்கினான். அதற்குரிய ஆதாரங்களைத் தான் மேலே கண்டோம். அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் ஜின்களும் அடங்கும். பலசாலியான ஜின்கள் - முத்துகுளிக்கும் ஷைய்த்தான்கள் எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்தன.

வீட்டிற்கு வரும் - ஜின்கள் - பாம்புகள்

ஜின் என்ற அரபு பதத்திற்கு - மறைவானது - என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிர்க்கு அந்தப் பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.

ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா (ரலி) ஹாக்கிம்)

பொதுவாக பாம்பினத்தை ஜின்கள் என்று குறிப்பிடலாம் இதற்கு குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது. (பார்க்க 27:10)

பாம்புகள் அனைத்தும் ஜின்கள் இல்லை ஆனால் ஜின்களில் சிலது பாம்புகளிலும் அடங்கும். இதை கருத்தில் கொண்டுதான் வீட்டில் உலவும் பாம்புகளை எடுத்தவுடன் அடித்து விட வேண்டாம் ஏனெனில் அவை ஜின்களாகக் கூட இருக்கலாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

ஜின்கள் கடும் விஷம் உள்ள பாம்புகளின் உருவில் இருக்காது என்பதால் கடும் விஷம் உள்ள பாம்புகளை எங்கு கண்டாலும் உடனே அடித்து விட வேண்டும்.

நபி(ஸல்) மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ''பாம்புகளைக் கொள்ளுங்கள் - முதுகில் வெள்ளைக் கோடுள்ள பாம்பையும் - குட்டையான சிதைந்த வாலுள்ள பாம்பையும் கொள்ளுங்கள் அவை இரண்டும் கண் பார்வையை அழித்து விடும்'' என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 3297)

விஷமுள்ள பாம்புகளை நபி(ஸல்) குறிப்பட்டுக் காட்டியதிலிருந்து அத்தகையப் பாம்புகளை காலம் கடத்தாமல் அடித்து விட வேண்டும். நல்லப் பாம்பை அடிக்காமல் விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் இந்த ஹதீஸ் கட்டுப்படுத்தாது. அவை கட்டாயம் அடிக்கப்பட வேண்டிய பாம்புகளாகும்.

வீட்டில் தென்படும் பாம்புகளில் ஜின்களும் அடங்கும் அதனால் அதை உடனே அடிக்காமல் போய்விடு என்று கூறுங்கள் மூன்றுமுறை கூறியும் போகாவிட்டால் அதை அடியுங்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூ லுபாபா(ரலி) புகாரி 3298 - முஸ்லிம்)

பாம்புக்கு காது கேட்குமா... தமிழ் அறியுமா... என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமல்லை. பாம்புக்கு செவி புலன் கிடையாது என்பது உண்மைதான். பாம்புக்கு தான் செவி புலன் கிடையாதே தவிர பாம்பு வடிவில் வரும் ஜின்னுக்கு செவிபுலன் உண்டு. ''போய்விடு'' என்ற அறிவிப்பு ஜின்னுக்குத் தானே தவிர பாம்புக்கு அல்ல. நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் பொய் இருக்காது என்பதால் எந்த மொழியில் சொன்னாலும் ஜின்களுக்கு விளங்கும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலைமானுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால் போய் விடு என்று ஹதீஸ் இருப்பதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அவ்வாறு நபி(ஸல்) சொல்லி இருக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளலாம்.

சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் கட்டுப்பட்டன என்பது உண்மை. இந்த கட்டுப்பாடு எதுவரை நீடித்தது? அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தான் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இதை நாமாக சொல்லவில்லை. குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே 'மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)

சுலைமான் (அலை) இறந்து அது ஜின்களுக்கு தெரிய வந்ததும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஜின்கள் விடுபட்டு விட்டன என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவித்து விடுகிறது. எனவே இன்றைக்கும் ஜின்கள் சுலைமானுக்கு (அலை) அவர்களுக்கு கட்டுப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். (ஜின்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அவற்றிர்க்கு கட்டளையிட சுலைமான் (அலை) உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையென்றால் ஜின்களுக்கு கட்டளையிடுவது யார்?)

ஒரு வேளை இன்றைக்கும் கட்டுப்படுவதாகவே வைத்துக் கொள்வோம் - ஒரு பேச்சுக்குதான் - வைத்துக் கொள்வோம்.

பிறரது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிர்க்கு நாம் எப்படி ஆர்டர் போட முடியும்.

ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியரைப் பார்த்து மாணவன் நீங்கள் தலைமையாசிரியருக்கு கட்டுப்பட்டவராக இருந்தால் எனக்கு அதிக மார்க் போடுங்கள் என்கிறான்.

முகலாய மன்னர்களுக்கு நீங்கள் கட்டுப்படுபவர்களாக இருந்தால் எங்களுக்கு வரி கொடுங்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.

இதுவெல்லம் அறிவுப்பூர்வமான வாதம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சுலைமான்(அலை) அவர்கள் பற்றிய நிலையும் அப்படித்தான். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் யாராவது இப்படி சொல்லி இருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கும். அவர்கள் மவுத்தாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி சொல்வது எந்த வகையிலும் பொருந்தவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் மட்டும் வசப்பட்டு இருக்கவில்லை. காற்றும் வசப்பட்டிருந்தது. இன்றைக்கு வேகமாக புயல் காற்று வீசும் போது ''நீ சுலைமானுக்கு கட்டுப்பட்டால் வீசாமல் நின்று விடு'' என்று யாராவது சொல்ல முடியுமா... ஜின்களுக்கு ஒரு நியாயம் காற்றுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியாது.ஏனெனில் இரண்டும் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டது தான். 

சுலைமானுக்கு கட்டுப்பட்டால் என்று ஹதீஸ் இருப்பதாக யாராவது கூறினால் ஹதீஸ் என்னையும் அது இடம் பெறும் நூலையும் கேளுங்கள் முடிந்தால் அந்த காப்பியை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஜின்கள் பற்றி ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளோம். ஜின்களை வசப்படுத்த முடியுமா... போன்ற மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்கள் எங்களுக்கு எழுதலாம். (இறைவன் மிக்க அறிந்தவனாக இருக்கிறான்)
 
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்